எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 10 ஜூலை, 2025

இவர்கள் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்கள்!!!

மிழில் வெளியாகும் பத்திரிகைகளில்[நாளிதழ்கள்] தினத்தந்தி, தினமணி, தினகரன், இந்து தமிழ் திசை, தினமலர், காலைக்கதிர் ஆகியன முன்னணிச் செய்தி ஊடகங்கள் ஆகும்.

செய்திகளை வெளியிடுவதால் இவை செய்திப் பத்திரிகைகள்.

இவை செய்திகளை வெளியிடுவதோடு விற்பனையை அதிகரிப்பதற்காக, கல்வி, அறிவியல், மருத்துவம் ஆகியவற்றுடன் மகளிர்&சிறுவர் தொடர்பான  கட்டுரைகளையும் ‘இணைப்பு’ இதழ்கள் மூலம் வெளியிடுகின்றன.

பாராட்டுக்குரிய செயல்தான் இது.

ஆயினும், சிந்திக்கும் திறனைச் சிதைக்கும் ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றிற்கும்கூட இணைப்புகள் வெளியிடுவதுதான் நம்மை கடும் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது; கண்டிக்கவும் தூண்டுகிறது.

பழையப் புராணக் குப்பைகளைக் கிளறி, நம்பவே இயலாத கதைகளையெல்லாம்[ஆபாசக் கதைகள் உட்பட] இணைப்புகளில் வெளியிடுகிறார்கள்.

இவை குறித்து நிறையவே எழுதலாம். உதாரணத்திற்கு ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பில்[10.07.2025] வெளியானதொரு கட்டுரையின் நகல் பதிவு:

கற்பனைக் கதைகளைப் பகிர்வதில் வரன்முறை ஏதும் இல்லையா?

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, எறும்பு, முயல், தவளை என்று இவையெல்லாம் ஈசனைப் பூஜித்துப் பேறு பெற்றன என்று பகுத்தறிவுக்குப் புறம்பான புராணக் கதைகளை மக்களிடையே பரப்புகிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?

பேய், பிசாசு, ஆவி, பூதம் எல்லாமும்கூட வழிபாட்டின் மூலம் வீடு பேறு பெற்றதாகவும் கதைகள் வெளியிடுவார்களோ?

இவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதோடு, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்களும் ஆவார்கள்!