எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 11 செப்டம்பர், 2025

‘அம்மா’ ஆவியும் அதிமுக உதயகுமாரின் அசைக்க முடியாத நம்பிக்கையும்!

கட்சியின் ஒற்றுமையைப் பயன்படுத்தி அ.தி.மு.க.,வுக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று கனவு காண்போருக்கு ஜெயலலிதாவின் ‘ஆன்மா’ தோல்வியைத்தான் தரும்'' என்று, செங்கோட்டையனுக்குச் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் மறைமுகமாகச் சாபம் கொடுத்தார்[தினமலர்].

அண்ணன் உதயகுமாரின் சாபம் பலிக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

மரணத்தைத் தழுவிய பிறகும் அம்மாவின்[தெய்வத்தாய் ஜெயலலிதா] ஆன்மா, தமிழர்கள் மீது உள்ள அளவிறந்த பாசத்தால் 24 மணி நேரமும் தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை, அண்ணன் உதயக்குமாரைப் போலவே அவரின் தம்பி ‘பசி’பரமசிவம் ஆகிய நானும் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அதியற்புதச் சக்தி வாய்ந்த அம்மாவின் ஆவி செங்கோட்டையனுக்குப் படுதோல்வியைப் பரிசாக[கட்சிக்குச் செய்த துரோகத்திற்கான பரிசு] வழங்குவது உறுதி என்பதால், அண்ணன் உ.குமாரிடம் ஒரு வேண்டுகோள்:

மு.க.ஸ்டாலின் ஆட்சியால் தமிழ்நாட்டுக்குக் கடுகளவும் பயன் விளையவில்லை. எனவே, “தி.மு.கட்சியை உடைத்துச் சிதறடிப்பதன் மூலம் ஸ்டாலினைப் பதவி விலகச் செய்து, அதிக அளவில் உறுப்பினர்கள் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியாரை முதல்வர் ஆக்குங்கள் என்று அம்மாவின் ஆன்மாவிடம் வேண்டுகோள் வையுங்கள்.

அண்ணனின் வேண்டுகோள் நிறைவேறத் தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/udayakumars-curse-brings-defeat-to-sengottaiyan/4030006

***“உதயகுமார் ஒரு முட்டாள்னா, அவரை உசுப்புகிற நீ படு முட்டாள்” என்று யாரெல்லாமோ ஏசுவதை மானசீகமாக உணர முடிகிறது. ஹி... ஹி... ஹி!!!