புதன், 27 ஜூன், 2018

[வாலிபப்] பருவம் படுத்தும் பாடு!!! [சிற்றின்பக் கதை]

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. மதுபானக்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், அவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“ஒரு மணி நேரத்துக்குப் பத்தாயிரம். ஒரு ராத்திரிக்கு அஞ்சு லட்சம், பத்து லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. பெரிய இடத்துப் பொண்ணுகளும், சினிமா ஸ்டார்களும், வி.ஐ.பி.களும் வந்து போற இடம் சார் அது. வர்றீங்களா?”  ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஆள் நானல்ல; பெரிய இடத்துச் சகவாசம் உள்ளவன்  என்பதாகப் பந்தாக் காட்டினான் பட்டாபி.
“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா.”

முகம் சுழித்தான் பட்டாபி.

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு ஐநூறு ஆயிரம் ரேட்ல லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நான்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க. விடியறதுக்குள்ள ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட..... போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் ‘தொழில்’ கூடத்திற்கு அவரை அழைத்துப் போனான்.

‘பலான’ தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பெரிய புள்ளிகளின் தொடர்பும் உண்டு. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் எடுபிடியாய்ச் சேர்த்துவிட்டான்.

வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான் பட்டாபி. பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்குப் வயது பதினாறு முடிந்திருந்தது.

“பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.
“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்குப் பயங்கரப் ‘பசி’.

இரவு நேரச் சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில் இன்னும் பசிப்பது போல உணர்ந்தான். அது வேறு பசி என்பது வெகு சீக்கிரத்தில் புரிந்தது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மங்கம்மா குப்பத்து வாலைக் குமரிகள் அவன் மனக்கண் முன் வந்து வந்து போனார்கள்.

சட்டைப் பையைத் துழாவினான் பட்டாபி. ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. கடைக்காரர் பழக்கப்பட்டவர் என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “அது மாதிரி இடத்துக்கெல்லாம் போக வேண்டாம். அது புதைகுழி. விழுந்தால் எழ முடியாது” என்று சொல்லித் திருத்தவோ, புது வழி காட்டவோ யாருமில்லாத நிலையில் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடந்தன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$