திங்கள், 12 ஜூலை, 2021

'அடச்சீ...ச்சீ...ச்சீய்' கதை!!!


2012ஆம் ஆண்டில், குமுதம் வார இதழ், 'ச்சீ..ச்சீய்...கதைகள்' என்னும் தலைப்பில் சிறுசுகளைச் சீரழிக்கும் கதைகளை வெளியிட்டுச் சீரும்சிறப்புமாய்த் தன் விற்பனையைப் பெருக்கிக்கொண்டது.

இம்மாதிரிக் கதைகளைத் தன்னால் மட்டுமே படைத்தளிக்க முடியும் என்று அது பெருமைப்பட்டுக்கொண்டது என்பது செவிவழிச் செய்தி. 

குமுதத்திற்குச் சவால்விடும் வகையில் இந்த நம் வலைப்பக்கத்திலும் ஒரு 'ச்சீ...ச்சீய்...கதை'யை வெளியிட்டோம். பல நாட்களாக, 'சீரியஸ்' ஆன பதிவுகளையே படித்துப் படித்துச் சோர்ந்து கிடக்கும் உங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக இந்தச் சிற்றின்பக் கதையை மீள்பதிவாக வழங்குகிறோம்!

குணாளன்!

பெயருக்கேற்ப, நல்ல குணங்கள் உள்ள இருபத்தைந்து வயது வாலிபன்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். பொழுது போகாத நேரங்களில், 'காந்தி’யின் ‘பிரமச்சரியம்’, திரு.வி.க.வின் ‘பெண்ணின் பெருமை’ போன்ற மன மாசுகளைப் போக்கும் நல்ல புத்தகங்களை மட்டுமே படிப்பவன்.

வாரப் பத்திரிகைகளும் படிப்பதுண்டு.

'குமுதம்’ படிக்கும்போது, சினிமாச் செய்திகள், கவர்ச்சிப் படங்கள், விரசம் கலந்த ‘அரசு பதில்கள்’, ஒற்றக் கூத்தனின் ‘ஆட்டமா, தேரோட்டமா?’ போன்ற மனதைக் கெடுக்கும் ’குப்பைக் கூளங்களை’க் கிழித்தெடுத்துவிட்டு, மிச்சமிருப்பதைப் பின் அடித்துக்கொண்டு படிப்பான்.

இப்படிப்பட்ட குணாளனின் கண்களில், குமுதத்தில் ‘கோலப்பன்’ என்னும் புனை பெயரில் குமுதம் ஆசிரியர் எழுதிவரும் ‘ச்சீய்..!’ கதை கண்ணில் பட்டது; கண்ணாடியில் பார்த்து மட்டுமே படிக்கும் வகையில் எழுத்துகளைத் திருப்பிப் போட்டு அச்சிட்டிருந்தது குமுதம். 

தலைப்பே ‘ச்சீய்...’ன்னா, உள்ள இருக்கிற மேட்டரும் 'நாத்தம்’ புடிச்சதாத்தான் இருக்கும் என்கிற முடிவோடு, கதையைப் படிப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி தேடினான் குணாளன்.

வீடு முழுக்கச் சல்லடை போட்டுத் தேடியும் அது கிடைக்கவில்லை[வீட்டில் நிலைக்கண்ணாடியும் இல்லை].

பொறுமை இழந்து, “பாட்டி, முகம் பார்க்குற கண்ணாடி எங்கே?”ன்னு தன் பாட்டியிடம் கேட்டான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன், தாத்தா பாட்டி வீட்டில் வளர்பவன்[பாட்டிக்கு வயது 60. தாத்தாவுக்கு 70].

"பக்கத்து வீட்டுக் காலேஜ் கொமுரி வாங்கிட்டுப் போனா. இன்னும் திருப்பித் தரல” என்று பொய் சொன்னாள் பாட்டி!

எழுத்துகளைத் தலைகீழாப் போடுறது; பத்து வரிக் கதையை ரெண்டு வரியா துக்கிளியூண்டு எழுத்தில் அச்சிட்டு மண்டை காய வைக்கிறது; வரிகளை வட்ட வட்டமாச் சுழிச்சி முகம் சுழிக்க வைக்கிறது. இப்படி, விதம் விதமான உத்திகளைக் கையாண்டு, இதழ் விற்பனையைக் கூட்டுறது [அந்தக் காலக்] குமுதத்துக்குக் கைவந்த கலை என்பது நினைவுக்கு வரவே, நண்பன் விவேக்கைப் பார்க்கக் கிளம்பினான் குணாளன்.

கண்ணாடியில் ‘ச்சீய்...கதை’ படித்துக்கொண்டிருந்த விவேக், இவனுக்காகச் சத்தம் போட்டுப் படித்தான். கேட்டதும் குமுறும் எரிமலையானான் குணாளன்.

"எத்தனை நல்ல உள்ளங்களைக் கெடுக்குது இந்தச் ‘ச்சீய்..கதை!’. இப்படி ஆபாசக் கதை போட்டு அட்டூழியம் பண்றதைக் குமுதம் நிறுத்தணும். தவறினா, குமுதம் பத்திரிகையைத் தடை செய்யச் சொல்லிப் பெரிய போராட்டமே நடத்தணும்” என்று வெடித்தான்.

“நீ மட்டும்தான் இப்படிக் குமுறிக் கொந்தளிக்கிறே. இந்தச் ‘ச்சீய்...’க் கதை அஞ்சாறு வாரமா வருது. குடும்பத் தலைவர்கள், தலைவிகள், பொது நலவாதிகள்னு யாருமே வாய் திறக்கலையேடா. இனியும் பெணாத்தாதே. உன் வேலையை மட்டும் பாரு” என்று நண்பனைக் கடிந்துகொண்டான் விவேக்.

அவனுக்குப் பதில் தரும் வகையறியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நம் குணாளன், “இனியும் இந்தக் குமுதம் என் வீட்டு வாசப்படிகூடத் தாண்டக் கூடாது. என் தாத்தா பாட்டிகிட்டேயும் சொல்லிடுறேன்” என்று நண்பனிடம் சூளுரைத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.

கதவைத் தட்ட அவன் கை நீண்டபோது, உள்ளே தாத்தாவும் பாட்டியும் பேசுவது கேட்டது.

அறுபது வயதான பாட்டி, எழுபது வயதுத் தாத்தாவிடம் சொன்னாள்: “குணா, கண்ணாடி எங்கே, கண்ணாடி எங்கே?ன்னு கேட்டுட்டே இருக்கான்.”

”மறந்தும் கொடுத்துடாதே” என்று கடுமையாக எச்சரித்தார் தாத்தா.

'அந்த அசிங்கக் கதையை நான் படிச்சுடக் கூடாதுன்னு தாத்தா நினைக்கிறார். அவருக்குத்தான் என் மேல எவ்வளவு அக்கறை?’ என்று நினைத்து மகிழ்ந்தான்; நெகிழ்ந்தான் குணாளன்; மெய் சிலிர்த்தான்!

ஆனால், அப்புறம் தாத்தா சொன்னதைக் கேட்டதும் அந்த மகிழ்ச்சி நெகிழ்ச்சியெல்லாம் போன இடம் தெரியவில்லை.

தாத்தா சொன்னது....

“குமுதம் கோலப்பன்னா கோலப்பன்தான். இந்த 'எழுத்துச் சித்தன்’ என்னமா எழுதுறான்! படிக்கும்போதே மனசு கிளுகிளுக்குது. 'அது'க்கான  'மூடு' வந்துடும் போல இருக்கு. இன்னும் எத்தனை கதை எழுதுவானோ தெரியல. அதுவரைக்கும் நம் பேரனுக்குக் கண்ணாடியைக் கண்ணில் காட்டிடாதே. குமுதம் வாங்குறதையே அவன் நிறுத்திடுவான்.” 

அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த குணாளன், "அடக் கடவுளே, இதெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?” என்று சொல்லித் தலைதலையாய் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான். அவன் சுய நினைவு பெறுவதற்கு நீண்ட நேரம் ஆனது!

====================================================================================

முக்கியக் குறிப்பு:

இந்தக் கதையை நமக்கு அனுப்பிய நண்பர், தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் 'கதாசிரியர்' பெயர் குறிப்பிடப்படவில்லை.