சனி, 12 மே, 2018

ஞானிகளுக்கு இது அழகல்ல; அறிவுடைமையும் அல்ல!

உடம்பைச் சிதைப்பது மட்டும் குற்றச்செயலன்று; அதனினும் மேம்பட்ட அறிவைச் சிதைப்பதும் தண்டனைக்குரிய குற்றம்தான். ஆளும் வர்க்கம் இதை உணராத அவலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்குமோ!

அவர் ஞானி; புகழின் உச்சியைத் தொட்டவர். தமிழில் பிரபலமான இன்றைய[12.05.2018] முன்னணி நாளிதழில்[பெயர் வேண்டாம். தமிழ் உணர்வு மிக்கவர்களால் நடத்தப்படும் இதழ் அது] மறைந்த ஓர் ஆன்மிகப் பிரபலம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

மறைந்த ஆன்மிகவாதியைப் பாராட்டுவதோ, அவரின் குறைகளைப் பட்டியலிடுவதோ நம் நோக்கம் அல்ல. அந்த ஞானியின் புகழ் பரப்பிட நினைத்து, மனம்போன போக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தாங்கிய இந்த ஞானியின் கட்டுரை குறித்த விமர்சனம் மட்டுமே இங்கு இடம்பெறுகிறது[பல்லாயிரவர் வாசிக்கும் தினசரியில் இக்கட்டுரை வெளியாகாமல் இருந்திருந்தால் நம் விமர்சனத்திற்கும் தேவை நேர்ந்திருக்காது].

இந்த ஞானி யார் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரேதான். 
அவர் இளையராஜா. இந்த இசை ராஜா, தம் கட்டுரையின் தொடக்கத்தில், 'என் மனதில் உன்னை[இறைவன்]த் தொழுவதற்காகக் கிடைத்த இந்தப் பிறப்பில் என்னைத் தொழுது கிடக்கின்றேன்' என்று நொந்துகொள்கிறார். ஆனாலும், 'உன்னை மட்டுமே முழுமையாகத் தொழுதிட மீண்டும் ஒரு பிறவி தா' என்றும் வேண்டுகிறார். [இன்னொரு பிறவி எடுத்து, வேலைவெட்டி எதுவுமில்லாமல், எதற்கும் எவருக்கும் பயன்படாமல், நெஞ்சுருக ஊனுருக அவனை மட்டுமே போற்றித் துதிபாடி ஒட்டுமொத்த ஆயுளையும் அவர் கழிக்க நினைக்கிறார்போலும்]. 

தொடர்ந்து, ரமண மகரிஷியைப் பற்றி எழுத முனைந்த இசைஞானி, 'ரமணர் 16 வயதில் பிணமாகத் தன்னைக் கிடத்தி, 'உண்மை நிலை'யை உணர்ந்து திருவண்ணாமலைக்கு வந்தார்' என்கிறார்.

ரமணர், 'உண்மை நிலை'யை உணர்வதற்காகத் தம்மைப் பிணமாக்கிக்கொள்ளுதல் தேவையா?' என்பது நம் கேள்வி['உண்மை நிலை'யை விவரிப்பது அத்தனை எளிதல்ல என்பதால் அது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை].

ஒருவர் தன்னைப் பிணமாக்கிக்கொள்ளுதல் என்பது தற்கொலை செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம். அவ்வாறில்லாமல், அவர் தன்னைப் பிணமாக்கிக்கொண்டதும் மீண்டும் உயிர் பெற்று எழுந்ததும் எப்படி என்பது வாசிப்பாளருக்கு இயல்பாக எழும் கேள்விகளாகும். இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படக்கூடும் என்பதை இசைஞானி எதிர்பார்க்கவில்லை போலும்!

ஒருவேளை, 'இது, கடவுளின் அவதாரங்களுக்கு மட்டுமே வாய்க்கும்' என்று அவர் சொல்லவும்கூடும்; தாம் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பதும் சாத்தியமே.

இசைஞானி இசையில் ஞானியாக இருக்கலாம். ஆன்மிகத்துறையிலும் ஞானியாக ஆவதற்குரிய தகுதியை அவர் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

ஒரு தொழுநோயாளி ரமணரின் கால்களில்  விழுந்து வணங்கினாராம். ''இனி என்னைப் பார்க்க வரவேண்டாம். திருவண்ணாமலையைச் சுற்று'' என்றாராம் ரமணர். நோயாளியும் சுற்றினாராம். நோய் குணமாகிவிட்டதாம். இதையும் இசைஞானிதான் சொல்லியிருக்கிறார்.

இந்த ஞானி, ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில்தான் தமிழகத்தில் மானாவாரியாய்த் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கிடந்தது என்னும் அவல நிலையை அறியார் போலும்! நோயாளிகளுக்காக, ரமணரே மலையை வலம் வந்து அத்தனை நோயாளிகளையும் குணப்படுத்தியிருக்கலாமே என்ற நினைப்பு இசைஞானிக்கு வராமல் போனது ஏன் என்று புரியவில்லை.

அப்போது ரமணருக்கு 18 வயது. ஞானி என்று பிரபலமடைந்திருந்த அவர் மீது பொறாமை கொண்ட ஒருவர் விஷத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாராம். ரமணரும் குடித்தாராம். பற்களில் காறை படிந்ததைத் தவிர எந்தவொரு பாதிப்பும் இல்லையாம். இதைச் சொல்லிப் புளகாங்கிதப்படுபவரும் இந்த இசை மேதைதான். பற்களில் காறை மட்டும் படிந்தது ஏன் என்பது நம் போன்றோர் கேட்கும் கேள்வி. அப்படிக் கேட்பது பாவ காரியம் என்று ஞானியார் நினைத்திடக்கூடும்.

''முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கு, நஞ்சை அருந்தியதால் அவரின் கண்டத்தில்[தொண்டையில்] கறை படிந்தது; எனக்கு என் பற்களில் கறை படிந்தது'' என்று ஜோக் அடித்தாராம் ரமணர். சுற்றியிருந்தவர்கள் ரசித்துச் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

விஷம் குடித்தும் சாகாமலிருந்த இந்த ஞானி[ரமணர்]க்குத்தான் புற்று நோய் கண்டு 6 முறை அறுவை நடந்ததாகவும் இசைப் பேரரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

புற்றுநோய் என்ன, வேறு எந்தவொரு நோயும் அவதாரங்களைத் தீண்டுவதற்கு அஞ்சுமே. ரமணரும் அவதாரம்தானே? புற்றுநோய் தாக்கியது எப்படி என்று நாம் கேட்கப்போவதில்லை. கேட்டால் நம் ஞானி பதில் தருவாரா என்ன?

கட்டுரையில், இன்னும் பல கதைகளைச் சொல்லியிருக்கும் இசைஞானி, 'தன் பிணத்தைத் தானே கண்டறிந்து நான் யார் என்று நிஜ சொரூபத்தில் வாழ்ந்து காட்டினார் ரமண மகரிஷி' என்பதாக அதற்கு இறுதி வடிவம் தந்திருக்கிறார் 

இவர் போன்றவர்களின் இம்மாதிரிக் கட்டுரைகளை வாசித்தால், இருப்பில் இருக்கிற அறிவையும் இழந்து, வெறும் சதைப் பிண்டங்களாய்  மூடநம்பிக்கைகள் சுமந்து நம் மக்கள் நடமாட வேண்டியிருக்கும் என்பதை இசைப்பேரரசு இளையராஜா அவர்கள் ஏனோ சிந்திக்கத் தவறிவிட்டார்.
***************************************************************************************************************

7 கருத்துகள்:

  1. இவர் இசையில் பெரும் ஞானி என்பதால் அறிவிலும் ஞானியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பே தவறு நண்பரே...

    இசையில் ஞானம் பெற்றது அறிவின் உதவி என்பது வேறு விடயம்.

    விசத்தை குடித்தவரிடம் விளம்பர நடிகையை விட்டு இருந்தால்...
    "உங்க கோல்கேட்டில் உப்பு இருக்கா ?"
    என்று கேட்டு இருப்பாளோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷம் குடித்தால் பல்லில் காறை பிடிக்கும் என்று கேள்விப்பட்டதில்லை.

      நடிகையின் கேள்வியில் அர்த்தமுண்டு. தரமான பற்பசையால் காறையை நீக்க்கலாமே.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. ஞானி என்றதும் நீங்க என்னைச் சொல்றீங்களோ என நினைச்சுட்டேன்ன்ன்:) பிக்கோஸ் மீயும் ஞானியாகிட்டேனெல்லோ:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் சொல்லக்கூடாது? பதிவு தவறாமல் எழுதுகிற 'ஊசிக் குறிப்புகள்' போதுமே அதிராவை ஞானி என்று சொல்ல.

      நன்றி அதிரா.

      நீக்கு
  3. ரமணர் பிணமாக தன்னை கிடத்தினாரா? இல்லை அதுபோல் உணர்ந்தாரா?

    இறப்புக்கு பிறகு என்ன நடக்கிறது ஐயா?

    பதிலளிநீக்கு