வெள்ளி, 31 ஜூலை, 2026

அசுரச் சாதனை நிகழ்த்திய அசாத்தியத் தன்னம்பிக்கையாளன்!!!

மூளையிலும், நுரையீரலிலும் புற்றுநோய் பரவிய நோயாளி அவர்; 'இது தேறாத கேஸ்' என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்; சைக்கிள் பந்தயங்களில் பல பரிசுகள் பெற்றவர்.

"இவருக்கா இந்த நோய்?" என்று உற்றார் உறவினரும் நண்பர்களும் மனம் வருந்தினார்கள்.


ஆயினும் என்ன, இந்த மனிதர் மட்டும் மனம் தளரவே இல்லை. "நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று அவ்வப்போது அவரின் உள்மனம் முழக்கமிடத் தவறுவதே இல்லை.


மனம் கலங்காமல் தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றார்.


ஃபிரான்ஸ் நாட்டில் பிரபலமானதும், 21 நாட்கள் நடைபெறுவதுமான Tour de France எனப்படும் 2000[சற்றே கூடுதல் தூரம்] மைல் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என்று ஆபத்தான பாதையில் சைக்கிள் ஓட்ட வேண்டிய போட்டி அது. அதில் கலந்துகொண்டு கைகால்களை முறித்துக்கொண்டவர்களும், உயிரிழந்தவர்களும் ஏராளமாம்.


அப்படிப்பட்ட ஆபத்தான போட்டியில்தான் 'அவர்' கலந்துகொள்வதாக அறிவித்தார்.


மருத்துவர்கள் எச்சரித்தபோதும் கலந்துகொள்ளவே செய்தார்; அவர் வென்றது பரிசை மட்டுமல்ல, புற்றுநோயையும்தான்[முற்றிலும் குணமடைந்தார்].


பின்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில்.....


“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். நான் அஞ்சவில்லை.... இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொன்னார்.


புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் அவர் வென்றதில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!


அவர் ?


முதன்முதலாக நிலவில் கால் பதித்துச் சாதனை நிகழ்த்தியவரின் பெயரைத் தாங்கியவர்தான் அவரும்.


அவர் 'நீல் ஆர்ம்ஸ்ட்ராங்'; இவர் 'லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்'Lance Armstrong!

          ==================

ஆதாரம்:https://www.britannica.com/biography/Lance-Armstrong; விகடன்[பழைய இதழ்].

வியாழன், 30 ஜூலை, 2026

ஒரு புத்திசாலிக் கதாசிரியனும் அதி புத்திசாலி இதழ் ஆசிரியனும்[அனுபவம் பழசு]!!

பிரபல வார இதழொன்று அனுப்பியிருந்த காக்கி நிற அகல உறையொன்றை ராதா மோகனின் வீட்டு வாசற்படியில் வீசிவிட்டுப் போனார் தபால்காரர். பிரித்துப் பார்த்த 'ராதா மோகன்' துன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் அனுப்பிய சிறுகதை, உறையிலிருந்த குமுதம் வார இதழில் பிரசுரிக்கப்படவில்லை.

'கதை போடாம பத்திரிகையை எதுக்கு அனுப்பினாங்க?' -யோசனையுடன் உறையை ஆராய்ந்தபோது அதன் உள்ளே மடிக்கப்பட்ட ஒரு கடிதம் இருந்தது.

'அன்புடைய ராதா அவர்களுக்கு, உங்கள் படைப்பைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். கதையுடன் நீங்கள் அனுப்பியிருந்த அழகான உங்களுடைய புகைப்படத்தை நம் வார இதழின் அட்டைப்படமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் ராதா மோகன் அனுப்பிய எந்தவொரு கதையும் அந்த முன்னணி வார இதழில் பிரசுரம் ஆனதில்லை. நண்பன் மூர்த்தியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டபோது, உன் பேரு ராதா மோகன். இனிமே 'ராதா'ங்கிற பேர்ல கதை அனுப்பு. கூடவே, ஏதாவதொரு அழகி படத்தைக் கூகுளில் சுட்டுக் கதையோடு இணைச்சிடு. அழகான பொண்ணு கதைன்னா கண்டிப்பா பிரசுரம் பண்ணுவாங்க'' என்றான் அவன். அவன் சொன்னபடியே செய்தான் ராதா மோகன். இருந்தும் அவனுடைய நீண்ட கால ஆசை நிறவேறவில்லை.

''இந்த எடிட்டர் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருப்பான் போல. தரமில்லேன்னு நினைச்சி என் கதையைக் குப்பைக் கூடையில் போட்டுட்டு, நான் அனுப்பிய அழகான பொண்ணு படத்தை அட்டையில் போட்டுட்டான். அந்த ஆளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடப்போறேன்'' என்று சபதம் ஏற்ற ராதா மோகன், கணினியைத் திறந்து வைத்து, கூகுள் தேடல் மூலம் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கு ஒரு பட்டியல் போட ஆரம்பித்தான்!

புதன், 29 ஜூலை, 2026

கதைக்கு ’நடை’ அழகு! அதென்ன ’நடை’?

'கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப் பொய் அழகு. அவரை(ஆவாரைச் செடி)க்குப் பூ அழகு' என்பார்கள். 

ஒரு கதையைப் பொருத்தவரை, அதன் கரு சொத்தையாக இருந்தாலும் சுவையான 'நடை'யில் எழுதப்பட்டிருந்தால் கவர்ச்சியான கதையாக அது ஆகிவிடுவது உண்டு. எனவே, 'கதைக்கு நடை அழகு' என்றால் அதில் தவறேதும் இல்லை. 

அதற்கான ஓர் எடுத்துக்காட்டு:

//ரு அன்றாடங் காய்ச்சிக்கு லாட்டரிக் குலுக்கலில் பத்து லட்சம் பரிசு விழுந்தது. அந்த யோகத்தை ஏழை வாலிபனான அவனால் நம்ப முடியவில்லை. பணம் கைக்கு வந்துசேரும்வரை என்னமாகத் தவித்துப்போவான்?

வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து நானும் அப்படியானதொரு தவிப்புக்கு ஆளானேன்.

வெண்ணிலா இந்த நிலவுலகத்து ரதி; பொன் வண்ண ரோஜா; பூரித்துக் குலுங்கும் இளமையின் புகலிடம்.

நானோ?

அழகு விசயத்தில் சராசரிக்கும் கீழே. எனக்கு ஆப்பிரிக்க நிறம்; சோமாலியா உடம்பு; அழகாகப் பிறந்துவிட்ட எவளும் "ஐயோ பாவம்" என்றுதான் என்னை மணக்கச் சம்மதிப்பாள்.

வெண்ணிலா பணக்காரப் பரம்பரையின் பலாக்கனி. நானோ கூலிப் பரம்பரையின் 'வெத்து' வாரிசு.

எனக்குச் சொந்த ஊர் கொக்கராயன்பேட்டை; தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமம். இதற்கு மேல் இந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அறுபது கிலோமீட்டருக்கு அப்பால் விசைத்தறிக்குப் பெயர்போன அதிவீரராமப்பட்டணம் போய் வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு வாரம் ஆகிறது. வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்.

திடீரென்று என் உள்மூளையில் ஒரு சந்தேகம். அது துக்கிளியூண்டு புள்ளி போல உதயமாகி இப்போது பூதாகரமாக உருவெடுத்து என்னைப் புரட்டியெடுக்கிறது; பதைபதைக்க வைக்கிறது.

அவளின் அப்பன் நாற்பது ஐம்பது விசைத்தறிக்குச் சொந்தக்காரன்; லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிற பெரிய புள்ளி. இந்தப் பண்ணாடைப் பயலை மாப்பிள்ளையாக ஏற்க முன்வருகிறான் என்றால் எங்கேயோ உதைக்கிறதே.

கிளி மாதிரியான தன் பெண்ணை இந்தக் கருங்குரங்கு கையில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறானே, இது எப்படி?

பண்டம் கெட்டுப்போனதோ?

சுழி பிசகில்லாமல் இருந்தால் மாடு உள்ளூரிலேயே விலை போயிருக்கணுமே? வெளியூர்ச் சந்தைக்கு ஏன் வரணும்?

நான் ஏமாளியா? பணமும் அழகும் காட்டி என்னை ஏமாற்றப் பார்க்கிறார்களா?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அங்கலாய்த்துப் புலம்பியது என் அல்பப் புத்தி.

"இல்லை. அப்படியெல்லாம் இருக்காது. வீணாகக் குழம்பாதே. வீடு தேடி வரும் அதிர்ஷ்டத் தேவதையை அடித்து விரட்டிவிடாதே" என்று என் ஆசை மனம் ஆறுதல் சொன்னது.

"வெண்ணிலா பரிசுத்தமானவள்; பத்தரைமாற்றுத் தங்கம்" என்று என்னைத் தேடி வந்து யாராவது தேறுதல் சொல்ல மாட்டார்களா?" என்று ஏங்கினேன்//

குறிப்பு:

ஒரு பிரபலமான கதாசிரியரின் கதையிலிருந்து எடுத்தாண்டது மேற்கண்ட கதைப் பகுதி. கதை சற்றே நீண்டது என்பதால் பதிவு செய்யவில்லை.

கதாசிரியர்? 

உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஹி... ஹி... ஹி!!!

செவ்வாய், 28 ஜூலை, 2026

’தமிழ் அவமதிப்பு’... ஆளுநருக்குக் கண்டனமாம்! ’தவெக’ தகிடுதத்தம்!!

ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே, ’ஆளுநர் உத்தரவின்படி நெல்லைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம்தான்’ என்று அறிவித்தார் பல்கலைத் துணைவேந்தர்.

அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி.....

பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம், பட்டமளிப்பு விழாவை ஒத்திப்போடச் செய்திருக்கலாம் ’தவெக’ அரசு.

விசிலடிச்சான்களைத் தூண்டிவிட்டு மறியல் செய்ய வைத்தும் நிகழ்வைத் தடுத்திருக்கலாம்.

தைரியமாக, ”தமிழ்த்தாய் அவமானப்படுத்தப்பட்டால், ’தவெக’ அரசு அதைக் கடுமையாக எதிர்க்கும்; தேவைப்பட்டால் பதவி விலகி, மக்களோடு இணைந்து, கிளர்ந்தெழுந்து ’பாஜக’வின் அராஜகத்தைக் கண்டித்துப் போராடும்.”

தேவைப்பட்டால் திமுக, அதிமுக போன்ற எங்களின் எதிரிகளுடன் சேர்ந்தும்கூடப் போராடத் தயங்கமாட்டோம்.” 

என்றிப்படியாக முன்னெச்சரிக்கைகள் செய்தும்[நிகழ்வை அமைச்சர் புறக்கணித்ததெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல] தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுக்குள்ளாவதைத் தடுத்திருக்கலாம் ’தவெக’ அரசு.

கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு, எல்லாம் நடந்து முடிந்த பிறகு[தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது] வாய் கிழியக் கண்டனங்கள் தெரிவிப்பது யாரை முட்டாளாக்க?

நடுவண் ஆட்சியாளர்களையோ ஆளுநரையோ அல்ல[அவர்கள் ரகசியக் கூட்டாளிகள்]; தேர்தலில் ’தவெக’வை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்த தமிழ் மக்களைத்தான்!

ஜோசப் ரொம்பவே புத்திசாலி!

”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!”... போதாது!!!

ளூர் ஷாநவாஸின் கேள்விகள் ஆணித்தரமானவை; தமிழினத்தவருக்கான அவசர முன்னெச்சரிக்கை.

நம் மீதான ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறை தொடராமலிருக்க, தமிழ் இளைஞர்களும், இனப்பற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடிப் போராட்டங்களில் ஈடுபடுவது அவசியம்.

போராட்டங்களில் எதிர்பார்க்கும்/எதிர்பாராத இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

நாம் ஆண்ட பரம்பரை என்று இனியும் பெருமை பேசுவது அவசியமற்றது; மற்றவர்களால் நாம் ஆளப்படாமல் தடுப்பதே அறிவுடைமையாகும்.

அதற்கான போராட்டத்திற்குத்தான் ஆளூர் ஷாநவாஸ் அழைப்புவிடுத்திருக்கிறார்.

இது தனிப்பட்ட ஒரு மனிதரின் அழைப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அழைப்பும் ஆகும்.

நாமக்கல் கவிஞரின் கூற்றுக்கு இணங்க, தமிழன் என்று சொல்வதும் தலை நிமிர்ந்து நிற்பதும் போதாது; களத்தில் இறங்கிப் போராட அனைவரும் ஒருங்கிணைவதும் திட்டமிடுதலும் அவசரத் தேவை ஆகும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!!

ஞாயிறு, 26 ஜூலை, 2026

”வந்தே மாதரம்”... மோடி ஆட்சியில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆம் இடம்! நாளை?

த்தனை அதிகாரங்களும்[குறிப்பாக ராணுவம்] இந்த நாட்டை ஆளும் மோடி வகையறா கைகளில்.

தமிழ் மாணவர்களுக்குப் ’பட்டம்’ வழங்கவுள்ள மனோன்மணீயம் பல்கலைக் கழக விழாவில், நாம் நம் தாய்க்குச் சமமாக மதிக்கும் நம் தமிழ் மொழிக்கு மூன்றாம் இடம்தான் என்கிறது, தமிழல்லாத பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆளுநரின் ஆணை.இதற்கான துணிவை அவருக்கு வழங்கியவர்கள், நம்மை அடக்கி ஆளுவதற்கான அத்தனை அதிகாரங்களையும் பெற்றுள்ள ’அவர்கள்’.

அந்த அதிகார வெறிதான் நம் தாய்மொழியை அவமானப்படுத்துவதன் மூலம் தமிழர்களாகிய நம்மையும் அவமானப்படுத்துகிறார்கள்; நாம்[தமிழர்கள்] அவர்களின் அடிமைகள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள்.

உண்மையில் நாம் அவர்களின் அடிமைகள்தான். இதற்கு முன்பு ஆளுநர் தலைமையில் நடந்த நிகழ்வுகளில் தமிழ் இழிவுபடுத்தப்பட்டதை வாய் பொத்தி, வேறு எதையெல்லாமோ பொத்தி நம்மவர்கள் மௌனம் சுமந்து வேடிக்கை பார்த்ததே இதை உறுதிப்படுத்துகிறது.

நடக்கவுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக விழாவிலும், நம் தாய்மொழி[தமிழ்த்தாய் வாழ்த்து] 3ஆம் இடத்துக்குத் தள்ளப்படுவதும் நிகழவுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் அந்த 3ஆம் இடமும் பறிக்கப்படும். தேசப் பற்றை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் வந்தே மாதரமும் ஜனகணமனவும் போதும்; தேசப் பற்றுக்கு எதிரான மாநிலப் பற்றும் மாநில மொழிப் பற்றும் தேவையில்லை என்பார்கள்.

தன்மானம், இனமானம் பேசுபவர்களிடமிருந்து கொஞ்சமே கொஞ்சம் எதிர்ப்பும் கிளம்பாது, நம்மை அடக்கி ஒடுக்கி முடக்குவதற்கான அத்தனை அதிகாரங்களும் படைத்தவர்கள் ’அவர்கள்’ என்பதால்!

ஆகவே, அனைத்துத் தமிழர்களும், அல்ல, அல்ல தமிழ்நாட்டை[விரைவில் பெயர் மாற்றப்படலாம்> முன்னாள் ஆளுநன் எதிர்ப்புத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது] வாழ்விடமாகக் கொண்ட இந்தியர்கள் அனைவரும் அறியத்தக்கதாவது.....

இது புண்ணியப் பாரதம்[இந்தியா]. இங்கே கட்டாயம் பாடப்படுபவை வந்தே மாதரமும் ஜனகணமனவும் மட்டுமே[எதிர்காலத்தில் இன்னும் பல ’மாதரம்’ பாடல்களும் சேர்க்கப்படலாம்].

வாழ்க பாரதம்! வளர்க தேசப் பற்று!!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பிள்ளையாரப்பா, பக்தனைக் காக்கும் பொறுப்பு உனக்கு இல்லையா அப்பா?!

உடல் பருமனும் சுவாசப் பிரச்சனையும் உள்ள பக்தர்கள் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில்[இடுக்கு> சிறிய சந்து] புகுந்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இருந்தும் ஆந்திர மாநில[பாவம் புறக்கணிக்கப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி]ப் பக்தர் ஒருவர் இடுக்கில் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார்.


பாறை இடுக்கில் புகுந்து வெளியேறுவதால் எல்லாம் புண்ணியம் சம்பாதிக்க இயலாது என்பதை அறியாத பக்தர்களும், இந்த நடைமுறைக்குத் தடை விதிக்காத நிர்வாகிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்[தண்டிக்கத்தக்கவர்களும்கட] என்பதில் விவாதத்திற்கு இடமே இல்லை.


பிள்ளையார்?


இவர் இருப்பது உண்மையானால், பக்தியின் பெயரால் பக்தர்களின் உயிர்கள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிற இவரும் கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியவர்தான்.


சக்தியுள்ள சாமிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியும்; அவர்களைத் தண்டிப்பது[இருந்தால்] அற்ப மனிதர்களான நமக்குச் சாத்தியமே இல்லை!


பாவம் பக்தர்கள்!

https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave

சனி, 25 ஜூலை, 2026

ஜோசப்[முதலமைச்சர்] எவ்வழி அவ்வழி நம் வழி!

தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் அவர்கள், தவிர்க்கவே இயலாத அன்றாடக் கடமைகளையெல்லாம் புறக்கணித்துத் திரையரங்கிற்குச்[அவர் வீட்டில் உள்ள பெரிய திரையிலேயே பார்க்கும் வாய்ப்பைத் தவிர்த்து] சென்று ’ஜனநாயகன்’ படம் பார்த்தாரென்றால், அதற்கான காரணம்.....

”தமிழ்நாட்டின் குடிமக்களாகிய நீங்களும்  திரையரங்குக்குச் சென்று அப்படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு, அளப்பரிய பெரும் பேறுகளைப் பெறுதல் வேண்டும்” என்று சொல்லாமல் சொல்லி நம்மைத் தூண்டுவதற்காகத்தான்.

படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் நள்ளிரவிலேயே, எங்கள் உரிலுள்ள ’நாலு’ தியேட்டருக்குச் சென்று வரிசையில் நின்று, நம் முதல்வர் நடித்த ’ஜனநாயகன்’[நம் ஜனங்களுக்கெல்லாம் இவரே நிரந்தர நாயகன் என்பதை உய்த்துணரச் செய்யும் படம்]ஐக் கண்டு களித்துக் கழிபேருவகை எய்தினேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

தலை அறுபடுவதைத் தடுக்கும் தலையாய கடமைகள் இருப்பினும், அவை அனைத்தையும் ஒதுக்கிவைத்து, இன்றே உங்களூர் திரையரங்குக்குச் சென்று, ஜனநாயகன் பார்த்து, முதல்வருக்கு முதல் மரியாதை செலுத்திடுவீர் என்று அறிவுறுத்துகிறேன்.

முதல்வர் எவ்வழி அவ்வழி நம் வழி!

வாழ்க நம் முதல்வர்! வெல்க[வசூலில்] ’ஜனநாயகன்’ திரைப்படம்!!

’சைகை’ மொழி போதும்! எதுக்கு? ’அது’க்குத்தான்!! ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 24 ஜூலை, 2026

நாட்டுப்பற்று அவசியத் தேவை. அதைக் கடவுள்[வந்தே மாதரம்] ஆக்க வேண்டாம் மோடிஜி!

’வந்தே மாதரம்’ பாடலை  அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதற்கான மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது’ என்பது ஊடகச் செய்தி.

’வந்தே மாதரம் பாடல் தாய்நாட்டை ஒரு தெய்வமாக(The Divine Mother / Shakti> லட்சுமி, சரசுவதி போன்ற பெண் சாமிகளும் அடக்கம்] உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ளதால், மதச்சார்பற்ற நாட்டின் கொள்கைகளுக்கு இது முரணாக அமைகிறது’ என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விமர்சிக்கப்படுவது மட்டுமல்ல, பிற மதத்தவர்கள்[குறிப்பாக இஸ்லாமியர்> அல்லாவை மட்டுமே தொழுபவர்கள்] இதை எதிர்க்கிறார்கள் என்பதும் அறியத்தக்கது.

சிறுபான்மையினராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் உடன்படமாட்டார்கள் என்பது உறுதி.

நம் பிரதமர் மோடி அவர்களிடம், ஒரு சமயச் சார்பற்ற குடிமகனாக நாம் முன்வைக்கும் சில கருத்துரைகள்:

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசு நிகழ்வுகளில் தவறாமல் ’ஜனகணமன.....’ பாடுகிறோம். இதனால் இந்தியா என்னும் இந்த நாட்டின் மீதான நம் பற்று தக்கவைக்கப்பட்டுள்ளது என்பது நம் நம்பிக்கை.

நீங்களும் நம்புவீர்கள். 

அப்புறம் எதற்கு இந்த ’வந்தே மாதரம்’ திணிப்பு?

இதை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்கிறீர்கள்.

விழாக்களில் கலந்துகொண்டு வாயசைத்து  இதைப்[சமஸ்கிருதத்திலும் கொஞ்சம் வங்காள மொழியிலும் எழுதப்பட்டது] பாடாதவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுமா?

”ஆம்” என்றால், கொடுக்கப்படும் கால அவகாசத்தில் இந்த மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெறாவிட்டாலும் தண்டனை உண்டா?

”உண்டு” என்பதே இந்தி&சமஸ்கிருத வளர்ப்பில் தீராத தாகம்[+மோகம்] கொண்டுள்ள உங்களின் பதிலாக இருக்கும்.

மோடிஜி அவர்களே,

எங்கள் தாய்மொழியான தமிழை நேசிப்பதுடன், இந்தியாவை எங்கள் நாடு என்று போற்றுகிற  எங்களையெல்லாம், இந்த[சமஸ்கிருதம், இந்தி, கண்ட கண்ட கடவுள் வழிபாடு]த் திணிப்பை எதிர்த்துப் போராடத் தூண்டி, தண்டனைகள் வழங்கி, சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வலிந்து எங்கள் மீது திணித்து, எங்களை இரண்டாந்தர நாலாந்தரக் குடிமக்கள்[அடிமைகள்] ஆக்கி, இந்த நாட்டின் முழுமையான சர்வாதிகாரியாக மாற ஆசைப்படுகிறீர்களா?

தமிழர்களின்[+இந்தி பேசாத பிற மாநிலத்தவர்] தலைவிதியும், இந்த நாட்டின் விரும்பத்தக்க/தகாத எதிர்காலமும் நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தது.

நன்றி மோடிஜி!

வியாழன், 23 ஜூலை, 2026

’விசிலடிச்சான்’களுக்கு நம் வீரவணக்கம்!!![உரைநடைக் கவிதை]

ஆடுங்கடா ஆடுங்க

அந்தரத்தில் எம்பிக் குதித்து ஆடுங்க


குதித்துக் குதித்து ஆடுங்க

குலுங்கிக் குலுங்கி ஆடுங்க


ஒட்டுமொத்த உடம்பையும்

உலுக்கி உலுக்கிக் குலுக்கி ஆடுங்க


உடம்பு சூடேறி உள்மண்டை மூளை 

உருகிக் கரையும்வரை ஆடுங்க


குத்தாட்டம் போடும் உங்களின் குஞ்சி

ஆட்டத்தை நிறுத்தும்வரை ஆடுங்க


ஆடுங்கடா ஆடுங்க

நாடி தளரும்வரை ஆடுங்க


ஆடி அடங்கிவிட்டால்.....


உயிருள்ளவரை

கோடிகளில் புரளும் கூத்தாடிகளுக்காக

நீங்கள் ஆடமாட்டீர்கள்


ஆடுங்கடா ஆடி முடியுங்கடா!😅

===========

எச்சரிக்கை! 

இங்கே ‘குஞ்சி’ ஆணின் தலைமுடி(குடுமி)யைக் குறிக்கும்; ஆணின் அந்தரங்க உறுப்பை அல்ல. ஹி…  ஹி…  ஹி!!! 


‘குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல’... நாலடியார்.

=====================

ஐயோ பாவம் தமிழர்கள்!

புதன், 22 ஜூலை, 2026

புனித நீரால் அபிஷேகங்கள்! புனித நெருப்பு அபிஷேகம் எப்போது???

நீரைப் பொருத்தவரை, 'சுத்த நீர்', 'அசுத்த நீர்', 'குளிர்ந்த நீர்', 'சுடு நீர்' என்றெல்லாம் பாகுபாடு செய்யலாம்.

இவை தவிர, ஒட்டுமொத்த உலகிலும் 'புனித நீர்', என்று  எதுவும் இல்லை[புரியக்கூடிய வகையில் இதற்கு விளக்கம் தந்தவர் எவருமில்லை]. அறிவியலால் ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை இது.

அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களுமே கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறார்கள். இவற்றில் நீருக்குள் மட்டும் கடவுள் புனிதத்தை ஏற்றினாரா? காற்றும், நெருப்பும், மண்ணும் பிறவும் புனிதமற்றவையா?

சாமிகளுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தும்போது, ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட[சாக்கடை நீரும் கழிவுகளும் கலந்தது] நீரை மட்டும், மந்திரங்கள் ஓதிக் கோபுரக்  கலசங்களின்[+சிலைகள்] மீது கொட்டினால் அவை புனிதம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்; மக்களும் நம்புகிறார்கள்.

இது நம்பத் தகுந்தது என்றால், கலசங்கள் மீது[+சிலைகள்] புனிதமான நெருப்புத் துண்டங்களைக் கொட்டியோ[தீபாராதனை அபிஷேகம் அல்ல], புனிதமான மண்ணைக் கலசங்கள்[+சிலைகள்] மீது தூவியோ அபிஷேகம் செய்வதில்லையே ஏன்?[புனிதரான கடவுளால் படைக்கப்பட்டவை எல்லாமே புனிதமானவைதானே?] 

மந்திரம் சொல்லும் தந்திரசாலிகளும், அவர்களைச் சாமிகளின் பிரதிநிதிகளென நம்பும் புத்தியில்லாத பக்தர்களும் பதில் சொல்வார்களா?

செவ்வாய், 21 ஜூலை, 2026

இவர்கள் மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்டவர்களா, மன்னர் பரம்பரையினரா!?!?!

விஐபி(VIP) அல்லது தலைவர்களின்[ஜோசப் உட்பட] கார்களின் முன்னால் பாதுகாப்புப் படையினர் ஓடுவது என்பது, முற்றிலும் தவறானதும் ஏற்றுக்கொள்ள இயலாததுமான ஒரு செயல்முறை ஆகும்.

விஐபி கார்கள் மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, அவர்களுடன் ஓடும் காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது[வாகனத்தில் ஏற்படும் சிறு தொழில்நுட்பக் கோளாறுகூட பெரிய விபத்தை ஏற்படுத்தலாம்]. இது அவர்களை அவமானப்படுத்துகிற செயலும் ஆகும்.
இது மனிதர்களின் உடல் திறனைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், கண்ணியமற்ற நடைமுறை எனவும் மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறது.
நவீன காலத்தில் தலைவர்களின் பாதுகாப்பிற்கு அதிநவீன குண்டு துளைக்காத கார்கள்(Bulletproof cars), ஜாமர்கள்(Jammers), கவச வாகனங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில் மனிதர்கள் ஓடிப் பாதுகாப்பளிப்பது தேவையற்றது.
மிகவும் குறுகியதும் மக்கள் நெருக்கம் மிகுந்ததுமான தெருக்களில் தலைவர்கள் செல்லும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவசரக் காலங்களில் வாகனத்தை வழிநடத்தவும் குறைந்த வேகத்தில் பாதுகாப்புப் படையினர் ஓடுவது அனுமதிக்கப்படலாம்.

அடிக்கடி நிகழும் இந்த அவல நிகழ்வுகளை, தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாதது மக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

திங்கள், 20 ஜூலை, 2026

ஜோசப்பின்[த.நா.முதலமைச்சர்] சுயரூபம்!!!

//சமீபத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலுவை தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

மதச்சார்பற்ற அரசின் முதல்வர் எனக் கூறிக்கொள்பவர் மத அடையாளத்தைத் தனது டேபிளில் வைக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சிலர்[பலர்].

அதே நேரத்தில் இதற்கு முன்னால் இருந்த முதல்வர்கள் மத அடையாளங்களைப் பயன்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்[கூத்தாடிகள் கவர்ச்சிக் குமரிகளுடன் அடிக்கும் கூத்தில் தீராத மயக்கம் கொண்டவர்கள்]*

இவன்கள் பொய்யன்கள். முன்னாள் முதல்வர்களில் எவரும் முதல்வர் அறையில் மதச் சின்னங்களை வைத்திருந்ததில்லை என்பதே உண்மை[அரசு அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் மதம் சார்ந்த குறியீடுகள் மற்றும் சின்னங்களை வைக்கக் கூடாது என்பது கொள்கை முடிவு. இந்த மரபுப்படி, தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் தங்கள் அலுவலக மேஜைகளில் மதம் சார்ந்த சின்னங்களை வைத்ததில்லை. [1, 2]

1968-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் கடவுள்களின் படங்கள் மற்றும் சிலைகள் இருப்பதைப் படிப்படியாக அகற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர், 1993-ஆம் ஆண்டு முதல்வர் ஜெ. ஜெயலலிதா பிறப்பித்த அரசாணை(G.O.) மூலம், அரசு அலுவலகங்களில் மத வழிபாடு மற்றும் சின்னங்களை வைப்பது முறையாகத் தடை செய்யப்பட்டது> ஆதாரங்கள்: முகநூல், டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள்.

மதம்[கிறித்தவம்] பரப்பும் வெறிகொண்டவர்[தனிப்பட்ட முறையில் இவரின் மதப்பற்று விமர்சனத்துக்கு உரியதல்ல] ஜோசப் என்பதற்கு இந்த நிகழ்வே சான்றாகும்.

கொஞ்சமும் ’மத வெறி’ இல்லாத மக்கள் இணைந்து, ஜோசப்பின் விசிலடிச்சான்களைத் திருத்த முயன்றால் அது பெரிதும் வரவேற்கத்தக்கது.

***ஜோசப் முதலமைச்சராகப் பதவி ஏற்றபோதும், பின்னரும் நான் வெளியிட்ட பதிவுகள்[அவசியம் வாசிக்கத்தக்கவை]:

https://kadavulinkadavul.blogspot.com/2026/05/blog-post_560.html

https://kadavulinkadavul.blogspot.com/2026/07/blog-post_01.html

                      =================

*https://tamil.oneindia.com/news/chennai/vijays-desk-cross-sparks-secularism-debate-across-social-media-817421.html


சனி, 18 ஜூலை, 2026

நம் நுரையீரலின் செயல் திறன்...'20 வினாடி' சோதனை!

"நம்முடைய நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை ஓர் எளிய சோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்" -மருத்துவர் ஷரோன்.

அவரது பரிந்துரை.....

"20 விநாடிகள் அல்லது அதற்கு மேல் மூச்சைப் பிடித்து வைக்க முடியவில்லையெனில், அது நுரையீரலின் செயல் திறன் குறைவாக இருப்பதைக் குறிக்கலாம். அதேபோல், ஒரு சில படிக்கட்டுகளை ஏறியவுடனேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் கவனம் தேவை."


இவை அனைத்தும் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞைகள் என வலியுறுத்தும் மருத்துவர் ஷரோன், இந்த நிலையில் இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக்கொண்டால், சுவாச நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்."


https://www.bbc.com/tamil/articles/c4g87n5j12jo

வெள்ளி, 17 ஜூலை, 2026

ஜோசப் தவிர அத்தனை அமைச்சர்களும்[தவெக] அயோக்கியர்களா?!?!?

//முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் அமைச்சர் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்//[ஊடகங்கள்]

ஜோசப் அவர்களே, 

உங்களின் அமைச்சரவை சகாக்களை எடுபிடிகளை “லஞ்சம் வாங்கினால் பதவி பறிப்பேன்” என்று மிரட்டியிருப்பது நீங்கள் அசாத்தியத் துணிச்சல்காரர் என்பதையும், உலகம் கண்டிராத உத்தமப் புத்திரர் என்பதையும் அடையாளப்படுத்தியிருக்கிறது. பாராட்டுகள். 

பணிவுடன் எனக்கான சில சந்தேகங்களை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

சந்தேகங்கள்:

ஒன்று: திரைப்படத் துறையில் ஈடு இணையற்ற கதாநாயகனாக வலம்வந்த நீங்கள், பெற்ற ஒவ்வொரு படத்துக்குமான ஊதியத்தில் பெரும்பகுதி கறுப்புப் பணம்[கொஞ்சமே கொஞ்சம் வெள்ளை] என்பது உலகறிந்த ரகசியம்.

மக்களுக்குப் பயன்பட வேண்டிய வரியை ஏய்த்தது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுல்ல, தண்டிக்கப்பட வேண்டியதும்கூட[வழக்கு தள்ளுபடி?].

எந்தவிதமான சிறு தண்டனையிலிருந்தும் நீங்கள் தப்பித்ததோடு, இன்று தமிழ்நாட்டின் முதல்வர் அரியணையில் அமர்ந்து கோலோச்சுகிறீர்கள்.

ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என்று அமைச்சர்களைப் பார்த்து எச்சரித்திருக்கிறீர்களே, அவர்கள் எல்லோருமே அயோக்கியர்கள்[லஞ்சம் வாங்குவதால்] என்றும், நீங்கள் மட்டுமே யோக்கியர் என்றும் நினைக்கிறீர்களா? ஊர் உலகம் இதை நம்புமா?

இரண்டு: உங்கள் முன்னால் கூனிக் குறுகி[செங்கோட்டையன் வழக்கமாகக் செய்வது இது] அமர்ந்திருப்பவர்களை[அமைச்சர்கள்] உங்கள் 'தவெக’ கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தினீர்களே, அப்போதே இவர்களெல்லாம் யோக்கியர்கள்தானா என்று பரிசோதித்திருக்க வேண்டும்.  செய்யத் தவறியது ஏன்?

மூன்று: இவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவியைப் பிச்சையாகப் போட்டபோதாவது, இவர்களைச் சீதாப்பிராட்டி போல, அக்கினிப் பிரவேசம் செய்வித்து, அத்தனைப் பேரும் பத்தரைமாற்றுத் தங்கங்கள் என்பதைக் கண்டறிந்திருத்தல் வேண்டும். ஏன் செய்யவில்லை?

நான்கு: இவர்களுக்குப் பதவி அளித்தவுடனே, உங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்களை[ஒற்றர்கள்] இவர்களிடம் அனுப்பி, லஞ்சம்[வேலையில் சேர்தல், ஒப்பந்தம் பெறுதல் போன்றவை] கொடுக்கவைத்து, கை[மனதும்] சுத்தமானவர்களா என்பதைச் சோதித்திருக்கலாம். சோதிக்காதது ஏன்?

ஐந்து: “பதவி பறிப்பதாக நீங்கள் சொன்னவுடனே, “ஊழல்[குறிப்பாக லஞ்சம் பெறுதல்] செய்தால் நீர் எங்களின் பதவியைப் பறிப்பீர். நீரே ஊழல் செய்தால் உம்முடைய பதவியும் பறிக்கப்படும் என்பதை ஏனய்யா மறந்தீர்?” என்று உம்முடைய அமைச்சர்களில் ஒருவர்கூட கேட்கவில்லை. அத்தனைப் பேருமே மானமும் ரோஷமும் இல்லாதவர்களா என்று உங்களுடைய மனசாட்சி கேட்டிருக்கும். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

நான் கேட்க நினைத்தவற்றுள் மிக முக்கியமானவை மேற்கண்டவை.

சிந்தித்து விடை அறிவது ஒரு மாநிலத்தை ஆளுகிற உங்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

பிழை காணின் பொறுத்தருள்க!

புதன், 15 ஜூலை, 2026

நாம்[இந்தியர்கள்] இனியும் ‘இந்தி'யன்களின் கொத்தடிமைகளே!!![+காணொலி> உ.நீ.மன்றம் கண்டனம்]

//9, 10ஆம் வகுப்புகளில் 3ஆவது மொழி[இந்தி] தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம்>சிபிஎஸ்இ உத்தரவு... 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3ஆவது மொழிக்குத் தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது//[https://www.dinakaran.com/news/language_proficiency_test_cbse/].

இது இந்தித் ‘திணிப்பின் ஒரு கட்டம். அடுத்தக் கட்டமாக, 2028-29லிருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும். 

அப்புறம், ஒன்றிய அரசுக்குள்ள அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் பள்ளிகளிலும்[மாநில அரசுகள் நடத்துபவை உட்பட] அனைத்து வகுப்புகளுக்கும் இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுப் பொதுத் தேர்வும் நடத்தப்படும். இந்தியிலேயே பாடம் கற்பிக்கும்[பயிற்றுமொழி] முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

ஆக, எதிர்ப்புகளை முறியடித்து, இந்தியா முழுவதும் இந்தியைப் பரப்பி[ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. தனியார் நிறுவனங்களிலும் ஆதிக்கம் பரவும்], இந்திக்காரன்களும், அதனால் பயன் பெறுபவன்களும்[இந்தியாவை ஆளுவதற்கான குறிப்பிடத்தக்க வேறு தகுதி ஏதும் இவன்களுக்கு இல்லை] இந்தியாவை நிரந்தரமாக ஆளுவதுதான் இவன்களின் ஒரே குறிக்கோள்.

இவன்கள் முழங்கும் ஒருமைப்பாட்டின் உள்நோக்கமும் இதுதான்.

ஒருமைப்பாடு என்பது.....

ஒரே நாடு: இந்தியா                                                                             


ரே இனம்: ‘இந்தி’யர்


ஒரே மொழி: இந்தி

ஒரே மதம்: இந்து[த்துவா]

ஒரே கலாச்சாரம்: வடவர் நாகரிகம்

ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க.


ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்     


ஒரே தேர்வு[எழுதும் மொழி]: இந்தியில்


‘இந்தி’யன்&இந்தியால் பயன் பெறுபவன்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பாடாவிட்டால், வெகு விரைவில் ‘இந்தி’யன்கள் அல்லாத இந்தியர்கள் இந்த நாட்டில் கொத்தடிமைகளாக ஆவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

=================

காணொலி[புதியது]:

'கடத்தலும் கற்பழிப்புகளும்’... ஒப்பாரி வேண்டாம்! உடனடி நடவடிக்கைகள் தேவை மக்களே!!

சூதுவாது அறியாத குழந்தைகளை[மற்ற வயதுப் பெண்களையும்தான், கிழவிகளை வீடு புகுந்து சீரழிப்பது உட்பட]க் கடத்தி வன்புணர்வு செய்து, வதைத்துச் சீரழித்துக் கொன்று, சாக்கடைகளிலும், ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் வீசுவது அன்றாடக் கொடூர நிகழ்வுகள் ஆகிவிட்டன.

“அய்யய்யோ, என்ன கொடுமைங்க இது. இதைச் செய்த கயவாலிகளை அடித்தே கொல்லணும்; தூக்கிலிடணும். கடவுள் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார்” என்றெல்லாம் நம்மவர்கள் ஒப்பாரி வைத்துப் புலம்புவது வாடிக்கை ஆகிவிட்டது.

இதன் பயன் 0%தான்.

பொது மக்களின் ஒத்துழைப்புடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.

இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிக்க அரசுக்கு நாம் வழங்கும் முக்கியப் பரிந்துரைகள்:

*பள்ளிகளில், முதல் பாடவேளையில், வன்புணர்வு உட்பட மிக முக்கிய நாட்டு நடப்புகள் குறித்த செய்திகளை ஆசிரியர்கள் சுருக்கமாகவேனும் பிள்ளைகளிடம் சொல்லி விழிப்புணர்வூட்டலாம்[இது அரசாணை மூலம் கட்டாயக் கடமை ஆக்கப்படுதல் அவசியம்].

*வீடுதோறும், செய்தித்தாள் வாங்குவதோடு,[ஏழைகளாயினும் இது இயலாத ஒன்றல்ல] பிள்ளைகள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு முன்பே மேலோட்டமாகவேனும் செய்திகளை வாசிக்கப் பழக்கப்படுத்தலாம். ஊடகங்கள் வாயிலாக அரசு இதை மக்களுக்கு அறிவுறுத்துதல் தேவை.

*ஊர்தோறும் இளம் வயதுப் பிள்ளைகளுக்கான, தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தருவதும் மிக முக்கியக் கடமை ஆகும். தேவையான அளவுக்குப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் வேண்டும்.

*குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்குதல் முக்கியம்[நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக உலகறியச் செய்யலாம்].

*சமூக ஆர்வலர்கள் அடங்கிய அறிஞர் குழுக்களின் மூலம், மேலும் பல ஆலோசனைகளைப் பெற்றிட அரசு விரைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும். 

தவறினால்.....

காலிகளின் வன்புணர்வு அட்டூழியம் தொடரும்! தொடர்ந்துகொண்டே இருக்கும்!!

செவ்வாய், 14 ஜூலை, 2026

இது[பாரதம் > இந்தியா] பாவிகளின் தேசம்!!!

பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடும்போது, நம் முன்னோர்களைத் துணைக்கழைப்பது நம் வழக்கம். அந்த முன்னோர்கள் கொண்டிருந்த படுமுட்டாள்தனமான நம்பிக்கைகளில் சில.....

காசிகர்வதா:
காசியில், ‘விஸ்வேஸ்வரநாத்’ ஆலயத்தில்  ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. கல்லைக் கட்டிக்கொண்டு இந்தக் கிணற்றில் விழுந்து மூழ்கி இறந்தால் உடனடி மோட்சம் கிடைக்குமாம்[அப்படி மோட்சம் அடைந்தவர்கள் அத்தனைப் பேருமே இன்றளவும் அங்கே சோமபானம் பருகியபடி ஆனந்தப் பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறார்களாம்!]

ரத யாத்ரா:
‘ஜெகனாத்புரி’யில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் ‘ரத உற்சவம்’ இடம்பெறும். ஓடிக்கொண்டிருக்கும் ரதத்தின் சக்கரத்திற்கு அடியில் பாய்ந்தால், அடுத்த வினாடியே மோட்சத்திற்கு அதிரடிப் பயணம் மேற்கொள்ளலாம்[இத்தகு  புண்ணிய ஆத்மாக்களின் வருகைக்காக மோட்சத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்குமாம்!]

நரவதா:
தம் குழந்தையின் நல்வாழ்வுக்காக, ஓர் ஆதரவற்ற ஏழைக் குழந்தையைப் பிடித்துவந்து, கடவுளுக்குப் பலியிடுவது![ஏழைக் குழந்தைகளின் நிணமும் சதையும் குருதியும் தேவனுக்கு மிகவும் பிடித்தமானவையோ!?]

கன்யவதா:
ராஜபுதனத்தில், ராஜபுத்திரர்கள் தங்களின் புத்திரிகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, தங்களின் உறவினர் முன்பு தலைகுனிந்து பணிந்து வணங்கவேண்டும். இதை விரும்பாத அவர்கள் பெண் குழந்தை பிறந்தவுடனே அதைக் கொன்றுவிடுவது வழக்கமாக இருந்தது.

தேவதாசிப் பிரதா:
இளம்பெண்களைக் கடவுளுக்குத் திருமணம் செய்துகொடுப்பது[பின்னர் அவர்கள் கோயில் தர்மகர்த்தாக்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் தாசிகள் ஆக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே]

சதிப் பிரதா:
உடன்கட்டை ஏறுதல்/ஏற்றுதல்.

கங்கா பிரவாஹ்:
கங்கை, குழந்தை வரம் நல்கும் தேவதை ஆவாள். கங்கையில் நீராடினால் குழந்தை பிறக்கும். இப்படிக் குழந்தை பெற்றோர் பல்லாயிரக் கணக்கிலாம்!

இவை தவிர, சமூகச் சீரழிவுகளுக்குக் காரணமான எத்தனையோ மூடநம்பிக்கைகளுக்கு நம் மூதாதையர்களில் பலர்[எல்லோரும் அல்ல] அடிமைகளாய் இருந்துள்ளனர் என்பது அறியற்பாலது; ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

                                        =====================
உதவி: எம்.வி.சுந்தரம் எழுதிய ‘சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும்’[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்; ஐந்தாம் பதிப்பு; செப்டம்பர், 2008].