வியாழன், 29 பிப்ரவரி, 2024

பொல்லாத பாலுறவும் புரியாத மனித இனத்தின் எதிர்காலமும்!!!

லக அளவில், ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்நிலை தொடருமேயானால்.....

ஒரு காலக்கட்டத்தில், குடும்ப உறவுகள் முற்றிலுமாய்ச் சிதைந்து, மனிதர்கள் சுயநலமிகளாய் மாறிப்போவார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்[எங்கோ எப்போதோ வாசித்தறிந்தது].

‘செக்ஸ் அடாவடித்தனங்களால், சச்சரவுகளும், மோதல்களும் அதிகரித்து, மிகப் பெரிய அழிவை மனித குலம் சந்தித்தாலும், அதன் மூலம் பாடம் கற்றுப் படிப்படியாய்த் திருந்தும்’ என்றிப்படி அனுமானிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களின் அனுமானம் பொய்த்துப்போகவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, உலக நாடுகள் விழித்துக்கொள்ளுதல் அவசியம்.

சில இஸ்லாமிய நாடுகளில் ஆபாசத் தளங்களுக்குத்[விபச்சாரம் உட்பட] தடை விதித்திருப்பது[ஆயினும், குற்றங்கள் நிகழாமல் இல்லை] போல, உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் தடை விதிக்கும் காலம் வருமா?

“வரும். எப்போதும் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று நம்பிக்கை தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

யார் எதைச் சொன்னாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆபாசத் தளங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவே செய்கிறார்கள்; இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஊகம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள்.

எனினும், இப்போதைக்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்கலாம்தானே?

விதித்தால்.....

திருமணம் செய்வதற்கான சூழல் இல்லாதவர்களும், ஆபாசத் தளங்களுக்கு அடிமையானவர்களும் வடிகால் தேடுவார்களே, அதனால் பாலுறவுக் குற்றங்கள் அதிகரிக்குமே,  என்ன செய்வது?

என்ன செய்வது?

‘சிவப்பு விளக்கு’த் தொழிலுக்கு  அனுமதி வழங்குவது போல, சிவப்பு விளக்குத் தளங்களுக்கும்(online prostitution) உலக நாடுகள் அனுமதி வழங்கலாமா?

வழங்கலாம்; வழங்காமலும் இருக்கலாம்.

இரண்டில் எதைச் செய்தாலும்.....

மனித இனம் இருந்துகொண்டிருக்கக் காரணமான அதே பாலுறவால் என்றேனும் ஒரு நாளில் அழியும் என்பது 100% உறுதி!!!

புதன், 28 பிப்ரவரி, 2024

தற்கொலை கோழைத்தனம் அல்ல! ஆனால்.....

“வாழ்க்கை வாழ்வதற்கே” என்றார்கள்.

வாய்க்கு ருசியாய் உணவுண்டு மகிழ்வதும், ஆசைப்பட்டபடியெல்லாம் சுகபோகங்களை அனுபவிப்பதும் வாய்க்கும் என்றால் வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.

வறுமையில் சிக்கி  வாடி வதங்குவதும்,  கட்டுப்படுத்த இயலாத கெட்ட உணர்ச்சிகளாலும், தீராத நோய்களாலும் பிறவற்றாலும் வதைபடுவதும்  தொடருமேயானால், பிறந்தது வாழ்வதற்கல்ல, சாவதற்கே என்று எண்ணத் தோன்றும்.

அது தவறு.

தற்கொலை கோழைத்தனம் என்பதல்ல காரணம். 

மீண்டும் பிறப்பது நிச்சயமில்லை[மிக மிக மிக அரிய நிகழ்வு இது] என்பதால், இயன்றவரை மனதைத் திடப்படுத்திக்கொண்டு, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டேனும் வாழ்ந்துமுடிப்பதே ஏற்கத்தக்கதாகும்.

                                   *   *   *   *   *