வியாழன், 15 ஜூன், 2017

கூகுளில் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்தவர் யார்?

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!” என்பன போன்ற வெற்றுக் கூச்சல்களால் இனியும் தமிழ் வளராது; அறிவியல் துறையில் தமிழ் வளரவில்லையேல் வெகு விரைவில் நம் ‘தெய்வத்தமிழ்’ அழிந்துபோகும்! அதை அழியாமல் காப்பதற்குக் கடுமையாக உழைத்த ஓர் ‘அறிவியல் தமிழ் அறிஞர்’ பற்றிய பதிவு இது.
கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்த பெருந்தகை இவர்தான். தம் வாழ்நாளில் 8.5 லட்சம் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கினார்!

‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’, ‘அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ ஆகியன இவர்தம் ஆக்கங்கள்.

பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவந்த குழுவுக்குத் தலைமை ஏற்றவர்; ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழைத் தமிழில் வெளியிடுவதில் தீவிர முயற்சி செய்து, 35 ஆண்டுகள் அதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் இவர்.

‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கி இவர் ஆற்றிய தமிழ்ப்பணி  என்றென்றும் மறக்க இயலாதது. தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுத் தமிழ் வளர்த்தவர்.

‘கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ இவர் உருவாக்கியதே.

தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986இல் முதன்முதலில் சென்னையில் நடத்திய சாதனையாளர். அறிவியல், தொழில்நுட்பம், கணினித்துறை ஆகியன சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்ட அறிவியல் அறிஞர்.

பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகப் பணியாற்றிப் பாராட்டுப் பெற்றவர்.

இவர் ஆற்றிய அளப்பரிய அறிவியல் தமிழ்ப்பணிக்காக, கலைமாமணி, வளர்தமிழ்ச் செல்வர், ‘அறிவியல் தமிழ் வித்தகர்’ போன்ற பல விருதுகளைப் பெற்ற இந்தத் தமிழ்தொண்டர், ‘அறிவியல் தந்தை’ என்றும் போற்றப்படுபவர்.

இத்தனை, இன்னும் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி, தம் 82 ஆம் அகவையில்  காலமானவர் அறிவியல் தமிழ் அறிஞர் ‘மணவை முஸ்தபா’ அவர்கள்.

இன்று அவரின் பிறந்த தினம். அதை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய அரிய பத்து முத்தான தகவல்களை வழங்கியுள்ளார் ‘நாகலட்சுமி சிவலிங்கம்’ அவர்கள்[தி இந்து 15.06.2017]. அவருக்கும் தி இந்துவுக்கும் நம் நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




செவ்வாய், 13 ஜூன், 2017

”எனக்கு மாட்டிறைச்சி தாருங்கள்” -கேட்டு வாங்கிச் சாப்பிட்ட சுவாமி விவேகானந்தர்!!!

 விவேகானந்தர் இந்துமதத் துறவி ஆவார். 

‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்றும் மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான் இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் அவர் கூறியிருப்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.”(He is not a good Hindu whodoes not eat beef) - (தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) என்றும் அவர் கூறியிருக்கிறார்.

விவேகானந்தரே மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் ‘டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்’ என்னும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைத்தளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து, “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

“நோயுற்ற வலுவிழந்த பசுக்களையும்  கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவற்றையும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார் அவர். 

“மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

“பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!” என்றார் அந்த ஆள்.

“பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே?” என்று மடக்கினார் விவேகானந்தர். 

“ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர்:  “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். உங்களைப் போன்ற புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?."
=============================================================================================

நன்றி: ‘இந்துமதம் எங்கே போகிறது?’ http://thathachariyar.blogspot.in/
“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" ஆகியன இந்தத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.