புதன், 10 டிசம்பர், 2025

வாக்குத் திருடர்களை விரட்டியடிக்க ஒருங்கிணைந்து முழங்குவீர் “வந்தேமாதரம்”!

‘வந்தேமாதரம்’{தாயே[இந்தியா] வணங்குகிறோம்} தொடர்பான விவாதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறுகிறது.*

விவாதத்தின் முடிவு எதுவாயினும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரை விரட்டியடிக்க வந்தேமாதரமும் பயன்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால்,

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாக ஆன இந்தியாவை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குத் திருடர்கள்[நிரூபணம்: ராகுல்காந்தி] கைப்பற்றி ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

தங்களின் ஆதிக்கம் தொடர்வதற்காக, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றைத் தம் வசப்படுத்தி, தங்களின் அடாவடித்தனங்களைக் கண்டிக்கும் எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்துதல் மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், இந்தியைத் திணித்து மாநில மொழிகளை அழித்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களை இந்த மண்ணைவிட்டே விரட்டியடிக்க, ஆங்கிலேயரை விரட்டியடிக்கப் பயன்பட்ட அதே ‘வந்தேமாதரம்’ முழக்கம் இனியும் தேவைப்படுகிறது.

எனவே முழங்குவீர், “வந்தேமாதரம்... வந்தேமாதரம்... வந்தேமாதரம்”! 

*https://www.msn.com/en-in/news/india/amit-shah-hits-back-at-priyanka-gandhi-for-tying-vande-mataram-debate-to-bengal-polls-nobody-is-scared-of/ar-AA1RZJEu?ocid=msedgdhp&pc=NMTS&cvid=a32bfe8cf6f04524b8bb99410889bd3e&ei=14

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பொல்லாத வெறிநாய்க் கடி நோய்(Rabies) இல்லாத நாள் வருமா?

இன்றளவும் 'வெறிநாய்'க் கடிக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம்.

எனவே, வெறிநாயிடம் தென்படும் அற்குறிகளை அனைவரும் அறிந்துகொண்டிருப்பது மிக மிக அவசியம்.

அறிகுறிகள்:

*ரேபிஸ்(Rabies) கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணம் இல்லாமலே குரைக்கும். அது ஊளையிடுவதுபோல் இருக்கும்.

*ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

*காண்போரையெல்லாம் துரத்திக் கடிக்கவரும்.

*அதன் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும்.

*அதன் வாயிலிருந்து எந்நேரமும் எச்சில் ஒழுகியவாறிருக்கும்.

*சில வெறிநாய்கள் தெருமுனைகளில் தனியாகவும் அமைதியாகவும் இருப்பதுண்டு.

*உணவு உண்ணாது; இந்நாய் பெரும்பாலும் 10 நாட்களில் இறந்துவிடும்.

இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் சொல்லி எச்சரிக்கை செய்வது பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.

'வெறிநாய்'க் கடி குறித்த சில செய்திகள்:

*வெறிநாய் கடித்தால், ரேபிஸ்(Rabies) நோயின் அறிகுறிகள் 5 நாட்களுக்குப் பின்னர் தெரியவரும்; 90 நாட்களுக்குப் பிறகும்கூடத் தென்படலாம்.

*இதன் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி உண்டாகும்; காய்ச்சல் அடிக்கும்; வந்தி வரும்; உணவு உண்ண இயலாது.

*நோய் தாக்கியவர்களுக்கு ‘விழுங்கு தசை’கள்[தொண்டையில்] இறுக்கமடைவதால், சுவாசம் நிற்கிற உணர்வு ஏற்படும். உயிர்போகுமோ என்னும் அச்சத்தில் நோய் பாதித்தவர்கள் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்[இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்].

நோய் வரும் வழி:

வெறிநாயின் உமிழ்நீரில் ரேபிஸ்(Rabies) வைரஸ்கள் இருக்கும். அது மனிதரைக் கடிக்கும்போது, காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும். 

சிகிச்சை:

முன்பெல்லாம் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். இப்போதெல்லாம் நவீனத் தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில்[தவணைகளில்] ரேபிஸ்(Rabies) நோய் தாக்காமல் தடுத்துவிடுகிறார்கள்.

                             *   *   *   *   *

***மேற்கண்ட குறிப்புகள் மருத்துவ இதழொன்றில் இடம்பெற்றவை.