வெள்ளி, 17 ஜூலை, 2015

ஒரு ‘புதிர்'[suspense] & ‘அதிரடி’ சிரிப்புக் கதை! [புத்தம் புதுசு!!]

‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி? என்ற நூலைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது, “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்

பார்வை சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி...பார்த்து...சார்த்து...கோர்த்து...போர்த்து... வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்...வத்தன்...கொத்தன்...வத்தல்...தொத்தல்...மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்...க ச ட த ப ற...ய ர ல வ ழ ள...ல ள ழ ...ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு பத்து... அம்பது நூறு...ஆறு...ஆறடா அவன்...?”

என் அடிமனதில்  பயம் பரவியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெஞ்சில் ஏறி நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் அறுபது வயதைக் கடந்த ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

பைத்தியம்!

‘அடப் பாவமே...’ மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து இறங்க யத்தனித்தேன்.

பைத்தியம் என்னைக் கவனித்திருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று விளித்தது. ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது. “தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப்பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம், அவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” என் முன்னால் நின்றுகொண்டிருந்த பைத்தியம் மறு கோரிக்கை வைத்தது.

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து, பெஞ்சிலிருந்து தாவிக் குதித்து இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். புதுசா பல்செட் போட்டிருக்கேன். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க இங்கே வந்ததைக் கவனிக்கல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” அசடு வழியச் சிரித்துவிட்டு புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.
*****************************************************************************************************************************************************
கதை சொல்லும் ‘நான்’, நான்[‘பசி’பரமசிவம்] அல்ல!






புதன், 15 ஜூலை, 2015

ஆந்திரா மகாபுஷ்கர விழாவில் 29 பேர் சாவு! யாரெல்லாம் குற்றவாளிகள்?

#.....கோதாவரி நதியில்[ஆந்திரா] 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாபுஷ்கர விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

25 ஆம் தேதிவரை 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவின்போது கோதாவரியில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பமேளாவுக்குச் சமமாக நடக்கும் இந்த விழா, ராஜமுந்திரி கோதாவரி நதியில் கோடகும்பம் என்ற இடத்தில், நேற்று காலை 06.26 மணிக்குத் தொடங்கியது.

காஞ்சி சங்கராச்சாரியர்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோதாவரித் தாய்க்கு ஆரத்தி எடுத்து, புனித நீராடி விழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்துடன் புனித நீராடினார். பின்னர், அமைச்சர்கள், அதிகாரிகள், மடாதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் நீராடினர். அதன் பிறகே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். 

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நதியில் இறங்கியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு இறங்கியதால், நெரிசலில் சிக்கி, வயதானவர்கள், பெண்கள் என பலர் கீழே விழுந்தனர்; மிதிபட்டனர்; மூச்சுத் திணறி 13 பெண்கள் உட்பட 29 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.....

.....இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பத்துக்குப் பத்து லட்சம் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார்.....

.....இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அம்மையாரும் அன்னாரின் புதல்வர் ராகுல் காந்தியும், தங்களின் கட்சி சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் சிரஞ்சீவி, ‘சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட வி.ஐ.பி.களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலேயே போலீசார் கவனம் செலுத்தினர்; லட்சக்கணக்கான பக்தர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதனால்தான் இந்த விபத்து நடந்துள்ளது’ என்று கண்டித்துள்ளார்.#

மேற்கண்டவை இன்றைய நாளிதழ்ச் செய்திகள்.

25 ஆம் தேதிவரை 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவின்போது கோதாவரியில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம். 

இந்த மூடநம்பிக்கையை வளர்த்துவிட்டவர்களே கோதாவரி என்னும் ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து, புனித நீராடி விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எதற்குப் புனித நீர் ஆடினார்கள்?

மக்கள் புனித நீராடுவது அவர்கள் சுமக்கும் பாவங்களைக் கரைப்பதற்காக. இவர்கள் நீராடியது?

தாம் சுமந்த பாவங்களைக் கரைப்பதற்காகவா?! அடக் கடவுளே!

29 பேர்கள் பலியாகவும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடையவும் காரணமான இந்தச் சம்பவம் எதிர்பாராத விபத்து என்கிறார் சந்திரபாபு நாயுடு.

உண்மையில், இதுவொரு அசம்பாவித நிகழ்வல்ல; ஆறுகளுக்குப் புனிதம் கற்பித்து, அவற்றில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்னும் பொய்யான நம்பிக்கையை  மக்கள் மனங்களில் வளர்த்துவிட்டதால் விளைந்த விபரீதம் ஆகும்.

இப்படியொரு நம்பிக்கையை பக்தர்களின் மனங்களில் இன்றளவும் விதைத்துக்கொண்டிருப்பவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் போன்றவர்கள்.

இவர்கள் குற்றவாளிகள்.

“நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. அதில் தெய்வாம்சம், புனிதம் என்று போற்றி வழிபடுவதற்கு ஏதுமில்லை.  அப்படி இருப்பதாக நினைப்பது மூடநம்பிக்கை” என்று அறிவித்து, உயிர்ப்பலி கொள்ளும் இம்மாதிரி விழாக்களுக்குத் தடை விதித்திருக்க வேண்டும். அல்லது, பிரச்சாரங்கள் வாயிலாக, அப்பாவிகளின் மனங்களின் படிந்திருக்கும் அழுக்குகளைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இவற்றில் எந்த ஒன்றையும் செய்யாதது பெரும் குற்றம்.

இக்குற்றத்தை மத்திய மாநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களும் குற்றவாளிகளே!