புதன், 15 மே, 2019

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!?!?!?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் தந்தை.

கணவன் ஒரு நாள் காணாமல் போனான்; திரும்பி வரவேயில்லை.

தந்தையிடமே அடைக்கலம் தேடி வந்த அச்சிறுமியை ஒரு நபரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றார் விற்றான் அந்த ஆள். வாங்கியவன் அவளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பினான்.

வீட்டு உரிமையாளர்களும் அவர்களின் நண்பர்களும் அந்தப் பாவப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து வன்புணர்வு செய்தார்கள்.

நிராதரவான நிலையில் இப்படிப் பல ஆண்டுகள்[24 வயதுவரை] சீரழிக்கப்பட்டு, உடம்பும் மனமும் சிதைந்து உருக்குலைந்துபோன நிலையில், தெரிந்த ஒருவரின் வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள் அவள். ஆனால், உயிர் பிரியவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்த அனாதையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை தொடர்கிறது[ஊடகச் செய்தி 15.05.2019].

முகம் தவிர உடலின் தோல் முழுதும் உரிந்து தாங்கொணாத மரண வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாவப்பட்ட பெண் சொல்கிறாள்.....

''நான் இறக்கவே விரும்புகிறேன். வேறு எந்தவொரு பெண்ணும் என்னைப்போல் வாழ்நாளெல்லாம் வதைபடக் கூடாது.'' 

அவள் கடந்த காலத்தில் ஆடவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விவரித்தாள். இறுதியில், அவள் சொன்ன சில வார்த்தைகள் காலமெல்லாம் நம் நெஞ்சை வதைத்துச் சிதைக்க வல்லவை. அவள் சொன்னாள்.....

''நான் முற்றிலுமாய்க் கருகிவிட்டேன். இனி யாரும் என்னைப் பலாத்காரம் செய்ய முடியாது.''

'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பது நம் முன்னோர் வாக்கு. நம் மக்கள், காலங்காலமாய்க் கணக்கு வழக்கில்லாமல் பல தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். அவற்றில் எந்தத் தெய்வம் இம்மாதிரி திக்கற்ற பெண்களுக்குத் துணை புரிந்தது? புரிகிறது?

யாருக்குக்கேனும் தெரியுமா?

வாரம் தவறாமல் பக்கம் ஒதுக்கி ஆன்மிக நெறி பரப்பும் இதழாளர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா??

சாதாரண ஒரு மனிதர் சாட்சாத் முழுமுதல் கடவுளாகவே இந்த மண்ணில் நடமாடினார் என்று  ஓயாமல் கதை திரிக்கும் அந்த நம்பர் 1 பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா?

மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே மனிதகுலம் வாழும் என்பதை மறந்து, நாளும் சாமி தரிசனம், அபிஷேகம், ஆராதனை என்று அலையும் கோடானுகோடி பக்தர்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமே, சொல்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 14 மே, 2019

கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு?!

''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன் ஒரு கருத்து வெடியைக் கொளுத்திப் போட, காரசாரமான கருத்து மோதல் இங்கு நடைபெறுகிறது.
''கோட்சே, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பில் பயிற்சி பெற்றவர். ஓர் அமைப்பின் தூண்டுதலால் நடைபெற்றது காந்தி கொலை என்பதால், கோட்சே திவிரவாதிதான்'' என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி['இந்து தமிழ்' 14.05.2019].

தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ''ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம். அதனோடு தொடர்புகொண்டிருந்த கோட்சேயும் ஒரு தீவிரவாதிதான்'' என்னும் பொருள்பட அறிக்கை தந்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ''கோட்சேவால் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மைதான். இது ஒரு கொலை மட்டுமே''[கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை] என்கிறார்.

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கமல்ஹாசனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறாரே அன்றி, கொலைக்கும் தீவிரவாதத்துக்குமான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தமிழிசையின் கருத்துப்படி, கோட்சே காந்தியைக் கொன்றது ஒரு கொலைச் செயல் மட்டுமே. ஒரு இஸ்லாமியன் காந்தியைக் கொன்றிருந்தால், அது.....???
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------