வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆசீர்வதிக்கும் நாயும் ஆறறிவு அறிவிலிகளும்!!!

#மகாராஷ்டிரா மாநிலத்தில்  'சித்தாதேக்' என்று ஓர் ஊர். அந்த ஊரில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் ஓர் உயரமான மேடை. அதில் ஒரு நாய்  அமர்ந்திருக்கிறது. 

கோயிலில் இருந்து வெளியே வரும் பக்தர் ஒருவர் நாய்க்கு முன்னால் வளைந்தும் தலை குனிந்தும் நிற்கிறார். பதிலுக்கு அந்த நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகை செய்கிறது. 

கோயிலில் இருந்து வெளியேறும் வேறு சில பக்தர்கள் அந்த நாயிடம் கைகளை நீட்டுகிறார்கள். பதிலுக்கு அந்த நாயும் அவர்களுக்குக் கை கொடுக்கிறது. 

இந்த நிகழ்வுகளை, 'அருண் லிமாடியா' என்னும் நபர், காணொலி[வீடியோ]யாகப் பதிவு செய்து  சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்#

-இவ்வாறானதொரு செய்தியை, ஆன்மிகம் வளர்ப்பதில் அரும்பணி ஆற்றுகிற இரு  நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[ஜனவரி மாதச் செய்தி].

'கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாகப் பரவும் வீடியோ' -இது தினமலர் தந்துள்ள தலைப்பு.


'கோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்' -இது 'one india' வின் தலைப்பு.

'வெறுமனே செய்திகளை வெளியிடுவதோடு ஊடகங்களின் கடமை முற்றுப்பெறுகிறதா?' என்னும் கேள்வியை இங்கே தவிர்க்க இயலவில்லை.

ஒரு செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிதல் செய்தியாளர்களுக்கான கடமை அல்லவா? இதை அந்தச் செய்தி நிறுவனங்கள் மறந்தது ஏன்?

உயிரினங்களில் மனித இனத்தையடுத்து,   குறிப்பிடத்தக்கப் புத்திசாலித்தனம் வாய்க்கப்பெற்றது நாயினம். முறையான பயிற்சி மூலம்  சில வகை நாய்கள் அரிய செயல்களைச் செய்து நம்மை வியக்க வைப்பது யாவரும் அறிந்ததே.[ஒரு காணொலி கீழே].

காலால் தலையைத் தொடுவதற்குப் பயிற்சி கொடுத்து, கோயிலின் நுழைவாயில் மேடைதனில் இருக்கவைத்து, அதைக் காணொலியாகவும் பதிவு செய்து, பக்தர்களை அது ஆசீர்வதிப்பதாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  இந்த அருண் லிமாடியா.

இத்தனைக் காலமும், விதம் விதமான கடவுள்களும், அவர்களுக்கு இணையாக மதித்துப் போற்றித் துதிபாடப்பட்ட மகான்களும் வழங்கிய ஆசீர்வாதங்களால் முழுத் திருப்தி கிடைக்காமல், நாயிடம் ஆசீர்வாதம் பெறத் தலைப்பட்டுவிட்டார்களா பக்தகோடிகள்?!

குனிந்து கும்பிடுவோரின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிற இந்த நாய்.....

பகவானா, மகானா?!

                *                           *                                  *                                      *                              *

காணொலி:

https://www.youtube.com/watch?v=BWiloZnvXJI&authuser=0

======================================================================================

https://tamil.oneindia.com/news/mumbai/viral-video-of-dog-blessing-devotees-and-shakes-hands-outside-temple-in-maharastra/articlecontent-pf514719-408737.html  13 ஜன., 2021 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2688602   Updated : ஜன 12, 2021  20:23 |  Added : ஜன 12, 2021  20:22 |  

புதன், 14 ஏப்ரல், 2021

'குமுதம்' இதழில் ஒரு 'குப்பைமேனி'க் கட்டுரை!!!

முன்னொரு காலத்தில், இருபதுக்கும் மேலான என் ஒ.ப.கதைகளை வெளியிட்ட 'குமுதம்' வார இதழ், எப்போதிருந்து என் கதைகளை நிராகரிக்கத் தொடங்கியதோ அப்போதிருந்தே அதைக் காசு கொடுத்து வாங்குவதை நிறுத்திவிட்டவன் நான். ஓசியில் கிடைத்தால்[ஹி...ஹி...ஹி!] மட்டும் ஒரு முறை வாசிப்பதுண்டு.

சற்று முன்னர், தினமலர் இணையப் பக்கங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, குமுதம் இதழில் வெளியானதொரு[2013இல்] தரமான கட்டுரையை அது எடுத்தாண்டிருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானேன்.[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17400&ncat=18].

குமுதத்திலா இப்படியொரு அரிய படைப்பு என்று வியந்த நான் உங்களின் வாசிப்புக்காக அதை இங்கே பதிவு செய்கிறேன். குமுதத்துக்கும் தினமலருக்கும் என் நன்றி.

கட்டுரை:

'டெல்லி மருத்துவமனை தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லாத் தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததுதான் அதற்குக் காரணம் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

சரி, உணர்ச்சி என்றால் அது காமம் மட்டும்தானா?

நாம் எதிர்கொள்ளும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிகள்தான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் என்று உணர்ச்சிகளுக்கு ஒரு பட்டியல் தயாரித்தால் அது நீண்டுகொண்டே போகும்.

இவை எல்லாமே இருந்தால்தான் ஒருவன் முழு மனிதன் ஆகிறான். இந்த உணர்ச்சிகளின் தாக்கம் ஆளாளுக்கு மாறுபடும்.

இவற்றில், நம் மீது பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவது 'காமம்' என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.

செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய கற்பழிப்புக் குற்றங்கள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.

காம உணர்ச்சிகளை அடக்கி ஆண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய்,  தலைவலி,  திடீர்க் காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல் பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி,  இதயநோய் என்று ஏராள பாதிப்புகளுக்கு நாம் உள்ளாவோம்.

ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சியிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் இது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்குக் காம உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மை இல்லை.

நம் நாட்டில், உப்பு, காரம் போன்றவை இல்லாத உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்த  துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் எல்லாம் பட்ட பாட்டை... படும் பாட்டை இந்த நாடே அறியும்.

எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.

உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதற்கான எளிமையான வழிகள்:

பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையைக் கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.

உடற்பயிற்சி: காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும்.

வீட்டுத் தோட்டம் அமையுங்கள். நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இசை: இசையைக் கேப்டதைவிட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் காமத்திற்கான பெரும் வடிகாலாக அது அமையும்.

புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.

நண்பர்களிடம் பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்குத் தீர்வு இதில்தான் கிடைக்கும்.

மதுவுக்கு அடிமையாகாதீர்கள்: மது மயக்கம் காம உணர்வாக இருந்தாலும், எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்தும். 

- இரா. மணிகண்டன்'

===================================================================================

குப்பையில் முளைக்கும் 'குப்பைமேனி' மருத்துவக் குணம் கொண்டது.