செவ்வாய், 12 செப்டம்பர், 2023

//உலகில் முஸ்லீம்களே இல்லாத நாடு ‘வாட்டிகன்’!//... யாரைத் திருப்திப்படுத்த இந்தச் செய்தி?!

News18 Tamilன்று ஒரு செய்தி ஊடகம்.

//அதில் வெளியாகியுள்ள இன்றையச் செய்திகளில், 'உலகில் முஸ்லீம்களே இல்லாத ஒரு நாடு ‘வாட்டிகன்’// என்பதும் ஒன்று.

கிறிஸ்தவர்களின் தலைமை இடமாகக் கருதப்படுகிற இந்த வாட்டிகனை[ஒட்டுமொத்தக் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இதைத் தனி நாடாக அங்கீகரித்திருக்கிறார்கள்] இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள்தான் பாதுகாக்கின்றனர். 2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.

போப்பாண்டவருக்கு ஆட்சிபுரியும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், கிறித்தவர்களின்[குறிப்பாக இத்தாலி] பாதுகாப்பில் இருப்பதால் இதை ஒரு நாடென்பது ஏற்புடையதா என்னும் கேள்வி ஆய்வுக்குரியது.

எனினும், இந்தவொரு ஆய்வு இங்குத் தேவையற்றதும்கூட. ஒரு முஸ்லீம்கூட இல்லாத நாடு என்று இதைக் குறிப்பிடுகிறதே ஊடகம், அதுதான் கவனிக்கத்தக்கது.

இஸ்லாமியர் பெரும்பான்மையினராகவும், கணிசமானவர்களாகவும் வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டு, மேற்கண்ட தகவல் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி இஸ்லாமியரைச் சிறுமைப்படுத்துகிறதா, கிறித்தவர்களைப் பெருமைப்படுத்துகிறதா?

எவரை எப்படிப் படுத்துகிறது என்பது பற்றியும் நமக்குக் கவலை இல்லை.

காரணம், மதக் கலவரங்களையும், உயிர்ப்பலிகளையும், தேவையில்லாத மத நம்பிக்கைத் திணிப்புகளையும் விரும்பாத மக்களுக்கு இம்மாதிரியான செய்திகளால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதுதான்.

மூடத்தனங்களும், கெட்ட எண்ணங்களும், மத வெறியும், ஆதிக்க மனப்போக்கும் கொண்ட இழிகுணத்தவரே இல்லாத நாடு என்று ஒன்று உருவாகுமேயானால், அதைச் செய்தியாக வெளியிடலாம்.

இது ஒட்டுமொத்த மனித இனத்துக்கு மட்டுமல்ல, ஊடகங்களின் வளர்ச்சிக்கும் பயனளிப்பதாக அமையும்.

* * * * *

https://tamil.news18.com/international/know-about-vatican-city-a-country-in-the-world-with-no-muslim-population-964712.html#gsc.tab=0

திங்கள், 11 செப்டம்பர், 2023

கடவுளின் ‘படைத்தல்’ தொழிலுக்கான சில முக்கியக் காரணங்கள்!!!

டவுளின் இருப்பை ஆராய்ந்த சீரிய சிந்தனையாளர்கள், ‘கடவுள் இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ள நிலையில், மக்களில் பலரும் கடவுளை நம்புவதோடு, வெறித்தனமாய் அவருக்கு விழாக்கள் எடுத்துத் துதிபாடி மயங்குகிறார்கள். அப்படியொருவர் இருப்பதாகக் கற்பனை செய்து, அவரின் படைத்தல் தொழிலுக்கான காரணங்களை ஆராய்ந்ததன் பயன் இந்தப் பதிவு.

*ஒற்றை நபரான[“கடவுள் ஒருவரே” என்று அவதாரங்களும், ஞான சாகரர்களும் திருவாய் மலர்ந்தருளியிருப்பதை நினைவுகூர்க] கடவுள், தனக்குள் இரண்டறக் கலந்திருக்கும் சக்தியின் அளவைக் கண்டறியும் முயற்சியாக இந்த, அகலம், நீளம், கனபரிமாணம் என்று எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத பிரபஞ்சத்தைப் படைத்திருக்கலாம்.  

அப்படி அவர் படைத்துவிட்டதால்தான், ஆறறிவு இருந்தும் பிரபஞ்சம் குறித்த ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியிலேயே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

*தனக்கு நிகர் தானே. தனக்கு இணையான, அல்லது தன்னினும் மேலான பேராற்றல் ஏதுமில்லை என்று நம்பிய கடவுள், அதன் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் விதமாக, அதி பிரமாண்டமான பேரண்டத்தையும், அதனுள் அடங்கிய நட்சத்திரங்கள், கோள்கள் முதலானவற்றையும், உயிரினங்களையும் படைத்து முடித்து, இதற்கு நிகரானதொரு அண்டம்[பிரபஞ்சம்] எதுவும் வெளியில் வெளிப்படக்கூடுமா என்பதை அறிவதற்காக இச்செயலைச் செய்திருக்கலாம்.

பிறிதொரு பிரமாண்ட அண்டம் இருப்பது அறியப்படுமாயின், அதைத் தோற்றுவிக்க இன்னொரு கடவுள் இருப்பதை அவரால் உய்த்துணர முடியும். அப்புறம், அவரை அழிப்பதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்தித்துச் செயல்படலாம்.

*யுக யுக யுகாந்தரங்களாக அவர் மட்டுமே இருந்துகொண்டிருந்த நிலையில்[எங்கிருந்தார் என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை கண்டறிவது அற்ப மானிடர்களுக்குச் சாத்தியமே இல்லை] உணர்வு சலித்து[போரடித்து]க் கிடந்த அவர்.....

பலம் வாய்ந்தனவும் பலவீனமானவையுமான விதம் விதமான, வகை வகையான உயிர்களைப் படைத்து, உணவுக்காகவும், உடலுறவுச் சுகங்களுக்காகவும் ஒன்றோடொன்று போராடவிட்டு வேடிக்கை பார்த்து இறும்பூது எய்துவதற்காக இருக்கக்கூடும்.

*மகத்தான பேராற்றலும், மகோன்னதமான உயரிய நற்குணங்களும் உள்ள தன்னை, தன்னால் படைக்கப்பட்ட எந்தவொரு உயிரும் போற்றித் துதிபாடாததால், மிகு வருத்தத்திற்கு ஆளான கடவுள், அதைச் செய்வதற்கு ஆறறிவுள்ள மனிதர்களைப் படைத்தார் என்றும் சொல்லலாம்.

[மற்ற உயிர்களைப் போலவே இவர்களுக்கும் மாளாத துன்பங்களையும் கொஞ்சமே கொஞ்சம் இன்பங்களையும் அனுபவிக்க வழிகள் வகுத்தார்.

துன்பங்களிலிருந்து விடுபட, அவர்கள் இவரைப் புகழ்ந்து போற்றுவதையே பிறவிப் பயனாகக் கருதினார்கள். பேரின்பத்தில் திளைக்கலானார் கடவுள்].

*அவர் பெற்ற அந்தப் பேரின்பத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், மனிதர்களில் கணிசமானவர்கள், படைப்பில் அவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டி[ஓருயிரின் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்துதல், வதைத்தல், சிதைத்தல் முதலானவை] அவரைக் கடுமையாக விமர்சிப்பதை அறிய நேர்ந்தபோது வெகுவாக மனம் துவண்டார். விளைவு?

படைப்புத் தொழிலும் வேண்டாம் ஒரு பண்ணாடையும் வேண்டாம்; ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அழித்துவிட்டு, முன்பு போலவே ஏகாந்தியாகக் காலம் கழித்திடலாம்” என்று கடவுள் முடிவெடுத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது!

ஆகவே, மனிதராகப் பிறந்த அனைவரும் அறியத்தக்கது என்னவெனில்.....

வெகு விரைவில் நாம் வாழும் உலகம்[பிரபஞ்சம் உட்பட] அழியப்போகிறது என்பதே.

எப்போது என்பதை நம் விஞ்ஞானிகள் தக்கத் தருணத்தில் அறிவிப்பார்கள்!