எனது படம்
எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

சனி, 16 மே, 2026

‘சார்பதிவாளர்கள் மக்களை நிற்கவைத்துப் பேசக்கூடாது’ -அரசு! லஞ்சம் வாங்கும்போது?

//சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்கவைத்துப் பேசக்கூடாது. பொதுமக்களுக்கு நாற்காலி வழங்கி அமரவைத்து மட்டுமே பேச வேண்டும் என்று பதிவுத்துறைத் தலைவர்(IG) கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்//[ஊடகச் செய்தி].  

பொதுமகன்[பொதுமக்கள்] நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்க, அதிகாரி சற்றே குனிந்து தலை தாழ்த்தி, இரு கரம் நீட்டித்தான் லஞ்சம் வாங்குதல் வேண்டும்’[ஒளிவுமறைவு கூடாது] என்றும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டால், புதிய அரசுக்கு அமோகமான பாராட்டுகள் கிடைக்கும்.

எந்தவொரு கொம்பன் முதல்வராக வந்தாலும், ஏதாவதொரு திருட்டு[+குறுக்கு] வழியில் இவர்கள் கையூட்டு[லஞ்சம்] வாங்குவது தொடரும் என்பது உறுதி. அதனால்தான் இதையும் சட்டபூர்வமாக்கி, வாங்குபவர் கொடுப்பவருக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும் என்கிறோம்.

***கிண்டல், நக்கல் எல்லாம் இல்லாமல், அப்பட்டமாகப் புதிய முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நாம் வலியுறுத்த விரும்புவது.....

பொதுமக்களுக்கு மரியாதை மதிப்பு எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்; அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் இவர்கள்[சார்பதிவாளர்கள்] கொள்ளையடிப்பதைத் தடுக்க முதலில் வழி தேடுங்கள்.

லஞ்சம் வாங்காத சார்பதிவாளர்களே இல்லை என்னும் நிலையில்[பதிவு செய்வதிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன], இந்த அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துவது அத்தனை எளிதல்ல என்பதையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் முதலமைச்சரும் புரிந்துகொள்வது மிக முக்கியம்.